தேவன் எங்களோடே இருந்தால் இந்த அற்புதங்களெல்லாம் எங்கே? Jeffersonville, Indiana, USA 61-1231E 1நன்றி, சகோதரன் நெவில். மாலை வணக்கம், நண்பர்களே. மறுபடியும் வந்திருக்கிறேன். இன்று காலை எனக்கு நான்கு மணி நேரம் தவிர, அதிகம் கிடைக்கவில்லை. அது அவமானம். நான் நான்கு மணி நேரம் பேசின பின்பு, நீங்கள் என்னைக் குறித்து அதிக களைப்பு கொண்டு, என்னை மேடையை விட்டே துரத்திவிடுவீர்கள். (சபையோர் ''இல்லை“ என்கின்றனர். சகோதரன் பிரன்ஹாமின் சகோதரன் டாக், ''எனக்கு ஞாபகம் வருகிறது. உங்களுக்கு பேச நேரமில்லாமல் நீங்கள் எப்பொழுதுமே சில காரியங்களை விட்டு விடுவீர்கள் என்று ஒருவர் இன்று கூறினார்'' என்கிறார் - ஆசி). ஆம், ஐயா, (ஆனால் இன்றிரவு, தேனே, நீங்கள் விரும்பும் நேரம் அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம். ''சபையோர் ஆமென்'' என்கின்றனர். டாக் தொடர்ந்து அப்பொழுது நீங்கள் எதையும் பேசாமல் விட்டுவிட மாட்டீர்கள் என்கிறார்). நான் பாதி வேதாகமத்தை இங்கு எழுதி வைத்துள்ளேன் (யாரோ ஒருவர், ''நீங்கள் பிரசங்கம் செய்வதற்கு உங்களுக்கு இரவு முழுவதும் உள்ளது'' என்கிறார்.) இங்கு பல விலையேறப் பெற்ற சகோதரர் உள்ளனர். அவர்கள் பேசுவதை நாம் கேட்க வேண்டும். 2எத்தனை பேர் இன்று காலை ஆராதனையை ரசித்தீர்கள். (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). உண்மையில் நான்கு மணி நேரம். ஒலிநாடா எவ்வளவு நீளம் சென்றதோ, எனக்குத் தெரியவில்லை. ஆராதனைக்குப் பிறகு என் சகோதரி என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, அது வேறு யாருக்கும் அல்ல, அது எனக்காக மாத்திரமே. என் கணவர் ஜூனியரிடம், 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று நான் கேட்டபோது, அவர், ''சகோதரன் பிரன்ஹாம் இதைக் காட்டிலும் அதிக நேரம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன் என்றார். இது எல்லாம் எனக்காகவே கூறப்பட்டது'' என்றாள். அவள் பின்னால் உட்கார்ந்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவள் இங்கு இருந்தால், அவளை பழிப்பது போலாகிவிடும். எனவே அதை கூறாமல் விட்டுவிடுகிறேன். டிலோரஸ், நீ எங்கே இருக்கிறாய்? அவள் இங்கே இல்லை. நல்லது, அப்படியானால், நான் இதைக் கூறிவிடுகிறேன். அவள், ''அழகூட்டும் பொருட்களை சிறிது உபயோகிக்கும் குற்றத்தை நான் புரிந்து வந்தேன். ஆனால் அது இன்றுடன் முடிந்துவிட்டது'' என்றாள், அவள், இன்னும் மரிக்கவில்லையென்பதை உணர்ந்தாள், பார்த்தீர்களா? நீங்கள் மரிக்க வேண்டும் என்பதே... புத்தாண்டு செய்தியின் தலைப்பாயுள்ளது. கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை அருளுவாராக. 3இன்றிரவு அநேகர் வந்துள்ளதைக் காண்பது மிகவும் நன்று. சகோதரன் கிரகாம் ஸ்னெல்லிங், “நாம் சென்று சியோன் மலையின் மேல் வாழுவோம்” என்னும் அந்த பழைய பாடலைப் பாடி முடிக்கின்ற தருணத்தில் நான் உள்ளே நுழைந்தேன். ரபீ லாசனை தெரிந்தவர் இங்கு யாருமில்லை என்று நினைக்கிறேன். யாருக்காவது அவரைத் தெரியுமா? ஆம், இரண்டு மூன்று பேருக்கு. சகோதரன் கிரகாம் மற்றும் சகோதரன் ஸ்லாட்டர் அந்த பாடல் எனக்கு சகோதரன் லாசனை ஞாபக மூட்டியது. அவர் எப்படி அந்த பாடலைப் பாடுவாரென்று ஞாபகமுள்ளதா? அவர் சிறு உருவம் படைத்தவர். அவரை நான் “ரபீ” என்றழைப்பதுண்டு. ஏனெனில் அவர் ஒரு சிறு தட்டையான கறுப்பு தொப்பியை அணிவது வழக்கம். அவர் ஒரு பெந்தெகொஸ்தே போதகர், ஆமை ஓடு மூக்கு கண்ணாடியை அணிந்திருப்பார், நான், “காண்பதற்கு யூத ரபீயைப் போல் இருக்கிறீர்'' என்று அவரிடம் கூறியிருக்கிறேன். எனவே அவரை எப்பொழுதும் நாங்கள் ”ரபீ லாசன்“ என்றழைப்போம், மிகவும் அருமையான சகோதரன். அவருக்கு மிகவும் வயதாகியிருந்தது. அவருக்கு கூன் விழுந்திருந்தது. அவர் வாகன விபத்துக்குள்ளாகி, அவருடைய முழங்கால்கள் விரைத்துப் போனது. அவர் தம்முடைய கக்கத்தண்டத்தை, இல்லை, ஊன்றி நடக்கும் தடியை இந்த பக்கத்தில் தொங்கவிடுவார். நான் இந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பேன். ''மானிட வாழ்க்கையின் சக்கரங்கள் சுழலாமல் நிற்கும் நேரத்தில்” என்னும் பாடலின் அந்த பாகத்தை அவர் பாடும்போது, அவர் தமது நடக்கும் தடியைக் கையிலெடுத்து, என் கழுத்தில் அதை கொக்கியிட்டு, என்னை இப்படி அவர் பக்கம் இழுத்து, அவருடைய கைகளை என் தோளின் மேல் போட்டு, ''நாம் சென்று சீயோன் மலையின் மேல் வாழுவோம்'' என்று பாடுவார். 4இங்குள்ள வேறு யாருக்காவது ரபீ லாசனைத் தெரியுமா? ஒரு சிலருக்கு மாத்திரமே. அப்படியானால், இதை கூற விரும்புகிறேன். அவருக்கு ஒரு விசித்திரமான காரியம் சம்பவித்தது. அவர் நல்ல பிரசங்கி, அருமையான சகோதரன். அவர் பெரிய பொறுப்பு ஒன்றும் பெற்றிருக்கவில்லை. அவருடைய ஊழியம் அப்படிப்பட்டதல்ல. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பில் அவர் உண்மையாய் வாழ்ந்தார் என்று நானறிவேன், அது தான் முக்கியமானது. அவர் பிரசாங்க ஊழியத்தின் மூலம் போதிய பணம் சம்பாதிக்கவில்லையென்று அவருடைய மனைவி கருதினாள். எனவே அவர் வேலை தேட வேண்டுமென்று கூறினாள். அவர் எந்த நேரமும் வேதாகமத்தையே படித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவளுக்கு அவர் மேல் அதிக கோபமூண்டது. அவள் அவருடைய மடியிலிருந்த வேதாகமத்தை பிடுங்கி, அடுப்பில் தீ மூட்டி அதை தீயிலிட்டு எரித்தாள். சில மாதங்கள் கழித்து அவள் கிறிஸ்துமஸ் மரத்துக்கு விளக்குகள் பொருத்திக் கொண்டிருந்த போது, கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து அவளை அதே இடத்தில் எரித்துப் போட்டது. பாருங்கள், நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுப்பீர்கள், ''நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்,“ பாருங்கள். 5தேவனுடைய வார்த்தையைக் குறித்து ஒரு காரியம். அங்கு விபத்து நேர்ந்த அவர்கள், சாத்தான் அவர்களுடைய பொருட்களை அழிக்க முயன்றான். நான் இதைக் கூறும் போது, அவர்கள் எழுந்து நின்று, யாரோ ஒருவர் உள்ளே வருவதற்காக இடங்கொடுப்பதைக் காண்கிறேன். அவர்களுடைய வாகன இணைப்பு வண்டி (trailer), அறையிலிருந்த எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன. நான் அங்கு சென்று கண்டேன். அங்கு எரியாமலிருந்தவை ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமும். என் புத்தகமும், சகோதரன் ஆஸ்பார்னின் புத்தகமும் என்று நினைக்கிறேன். மற்றவை அனைத்துமே அந்த இணைப்பு வண்டியில் எரிந்து சாம்பலாகியிருந்தன. நான் வேதாகமத்தை கையிலெடுத்த போது, அது வெளிப்புறத்தில் சிறிது புகைந்து கொண்டிருந்தது. கர்த்தருக்கு சித்தமானால், என்றாகிலும் ஒரு நாள் அந்த வேதாகமத்தை, பிரசங்க பீடத்துக்கு கொண்டு சென்று, வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன் என்று அந்த சகோதரனிடமும் சகோதரியிடமும் கூறினேன். எல்லாமே போய்விட்ட பிறகு, வார்த்தை இன்னும் அங்குள்ளது. தேவன் தமது வார்த்தையை எவ்வளவு கவனமாகப் பாதுகாக்கிறார் என்பது மிகவும் அற்புதமல்லவா? இந்த வார்த்தை உங்களுக்குள் வர நீங்கள் அனுமதிப்பீர்களானால், அவர் உங்களையும் கவனமாகப் பாதுகாப்பார். அது உண்மை. 6வெள்ளம் வந்த சமயம், இங்கு ஓரிரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் வேதாகமத்தை இங்கு விட்டு சென்றுவிட்டேன். 1937ம் ஆண்டு வெள்ளம் திடீரென்று ஒரே இரவில் வந்து, இந்த கூடாரத்துக்குள்ளும் தண்ணீர் வந்து, இந்த பிரசங்க பீடத்தை மேலே கூரை வரைக்கும் உயர்த்திக் கொண்டு சென்றது. அப்பொழுது இங்கு வேறு ஒரு கூறையும் இல்லை. பிரசங்க பீடத்திலிருந்த வேதாகமம் மூழ்கிப் போவதற்குப் பதிலாக மிதந்து கூரை வரை எட்டினது. நான் இங்கு சுற்றிலும் படகோட்டி செல்ல வேண்டியதாயிருந்தது? தண்ணீர் மட்டம் இறங்கின போது, வேதாகமும் கீழே இறங்கி, நான் கடைசியாக எந்த அதிகாரத்தைப் படித்துக் கொண்டிருந்தேனோ, அதே அதிகாரத்தில் வேதாகமம் திறக்கப்பட்டதாய் காணப்பட்டது. “வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” அது உண்மை. அவர் அற்புதமானவர், இல்லையா? 7உண்மையாகவே நான் வேகமாக முடிக்க விரும்புகிறேன். ஏனெனில் பல அருமையான போதகர்கள் இங்குள்ளனர். அவர்களை மேடைக்கு அழைக்கலாமென்று எண்ணினேன். ஆனால் அவர்களை உட்கார வைக்க போதிய இருக்கைகள் இங்கில்லை. இங்கு நான் வந்த முதற்கொண்டு அநேக போதகர்களை கூட்டத்தினரின் மத்தியில் கண்டேன். ஒருக்கால் அவர்களுக்கு இன்றிரவு செய்தி இருக்கக் கூடும். நமது போகதர் பேசுவதை நாம் கேட்க விரும்புகிறோம், இன்னும் மற்ற போதகர்களுக்கும் தங்கள் இருதயத்தில் செய்தி இருக்கக் கூடும். நான் சுருக்கமாக சிலவற்றை சொல்ல முயல்கிறேன். 8இன்றிரவு நாங்கள் ஒன்றைத் துவங்கினோம். தேவனுக்கு சித்தமானால், என் வாழ்நாளில் இதுவரை நாங்கள் செய்யாத ஒன்று இன்றிரவு நடக்கப் போகின்றது. அன்றொரு நாள் அதைக் குறித்து நான் சிந்தித்து, சகோதரன் நெவிலுக்கு தொலைபேசியில் அதை அறிவித்தேன். அவரும் அது நல்ல ஒரு கருத்து என்று ஆமோதித்தார். புத்தாண்டில் விசிலை ஊதும் குழப்பம், கூச்சலிடுதல், குடித்து வெறித்தல், புத்தாண்டு களியாட்டு ஆகியவைகளுக்குப் பதிலாக, இன்றிரவு நாம் பீடத்துக்கு வந்து இராப்போஜனத்தில் பங்கு கொள்ளப் போகின்றோம். இன்றிரவு இங்குள்ள வெவ்வேறு போதகர்கள் அளிக்கவிருக்கும் செய்திகளை நாம் கேட்கும்போது, மிகவும் பயபக்தியுடன் இருப்போமாக. 9சென்ற ஞாயிறு இரவு, நான் ஒரு கிறிஸ்துமஸ் செய்தியை அளித்தேன். ஜார்ஜியாவிலிருந்தும் மற்றவிடங்களிலிருந்தும் சபைக்கு வருபவர்களிடம், ''நீங்கள் வர வேண்டாம் என்று கூறினேன். ஏனெனில் அது பிள்ளைகளின் கிறிஸ்துமஸை பாழாக்கிவிடும். அவர்கள்... அவர்கள் ஆவலுடன் அதை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் சிறு பிள்ளைகள். அந்த செய்தி அடங்கிய ஒலிநாடாக்களை உங்களுக்குத் தருவதாக நான் கூறினேன். அன்றைய ஆராதனைக்கு வராதவர்களுக்கு ஒலிநாடாக்கள் என் செலவில் அளிக்கப்படும். சகோதரன் உட்டிடமும் மற்றவர்களிடமும் தெரிவியுங்கள். அதை நான் கவனித்து, உங்களுக்கு ஒலிநாடாக்களைத் தருகிறேன். 10இன்றிரவு என் பொருளுக்கான வேதபாகத்தை நான் படிப்பதற்கு முன்பு, இந்த ஒன்றை முதலில் கூற விரும்புகிறேன். ஒருக்கால் ஏறக்குறைய நள்ளிரவு வரைக்கும் நாம் பிரசங்கம் செய்வோம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு பதினைந்து இருபது நிமிடங்களுக்கு முன்பு, நாம் வெளியே வந்து கர்த்தருடைய இராப்போஜனத்துக்காக அப்பத்தைக் கொண்டு வந்து பஸ்கா ஆட்டுக்குட்டி, அப்பத்தை இங்கு வைத்து, தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, பீடத்தின் முன்னால் தலைகளையும் இருதயங்களையும் வணங்கி, கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு கொள்வோம். அறை ஒலிப்பதிவு கருவிகளால் நிறைந்துள்ளன. நமக்கு போதிய இடம் இருக்குமாவென்று தெரியவில்லை... என்ன சொல்லுகிறீர்கள்? அந்த நேரத்தில் அவை வெளியே எடுக்கப்படும், எனவே நாம் கால்கள் கழுவுதலை தவிர்க்க வேண்டிய அவசியமிராது. நாளை திங்கள், நகரத்தின் புறம்போயிருந்து வந்திருப்பவர்களுக்கு வீடு திரும்ப நிறைய நேரம் இருக்கும். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரென நம்புகிறேன். 11நான் மேற்கேயிருந்து திரும்பி வரும் வரைக்கும், இதுவே நான் உங்களோடு கூட இருக்கும் கடைசி தருணமாகும். நான் அரிசோனாவுக்குச் செல்கிறேன். ஒருக்கால் முதலில் லூசியானாவுக்குச் சென்று அதன் பிறகு அரிசோனாவுக்கும் கலிபோர்னியாவுக்கும் செல்வேன். நான் திரும்பி வந்தவுடனே, உங்களிடம் வருவேன் என்று நம்புகிறேன். அது வரைக்கும் ஜெபியுங்கள். என் பயணத் திட்டம் எதுவும் நான் தயாரிக்கவில்லை. இன்றிரவு கூட்டத்தில் சகோதரன் பார்டர்ஸை சந்திப்பேன் என்று நம்புகிறேன். இன்று காலை இதை அவருடைய கவனத்துக்கு கொண்டு வந்தேன். அவர் கடிதங்களை பத்திரப்படுத்தி வைக்கிறார். அன்றொரு நாள் அவர் என்னிடம் அழைப்புகள் அடங்கிய புத்தகத்தைக் கொடுத்தார். அதில் எல்லாவிதமான அழைப்புகள் அடங்கியுள்ளன. ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் இந்த முறை, ''ஓரிடத்துக்கு போ, அங்கு முடிந்தவுடன், அங்கிருந்து நீ எங்கு செல்ல வேண்டுமென்று உனக்குச் சொல்லுவேன்“ என்று கூறிவிட்டார். பாருங்கள், அவர் அப்படியே, அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று கூறி வழிநடத்துவார். அவர் அப்படி செய்யும் போது, யாராவது அழைத்து எனக்காக காத்திருப்பார்களானால், நான் உடனடியாக அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். 12இது புத்தாண்டு தீர்மானம் அல்ல, ஏனெனில் நாம் அந்த தீர்மானம் செய்வது கிடையாது. அதனால் ஒரு உபயோகமுமில்லை, ஏனெனில் அதை நாம் முறித்து விடுகிறோம். ஒவ்வொரு புத்தாண்டு இரவும், என் தந்தை புகையிலையை தூர எறிந்து விடுவதையும் அடுத்த நாள் காலையில் அதை அங்கிருந்து எடுத்துக் கொள்வதையும் நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? அது அப்படித்தான் நடக்கிறது. நாம் தீர்மானம் எதுவும் செய்ய வேண்டாம். நாம் தேவனிடம் அவருடைய இரக்கத்துக்காகவும் கிருபைக்காகவும் கெஞ்சுவோம். 13இராப்போஜனம் கொடுக்க எனக்கு வேறொரு தருணம் கிடைக்காமல் போனால், நான் இராப்போஜன நேரத்தில் துரிதமாக செல்ல வேண்டுமெனும் நிலைமை ஏற்பட்டால்... இந்த ஒரு காரியத்தை செய்ய எனக்கு வாஞ்சையுண்டு; என் விருப்பங்களில் ஒன்று என்னவென்றால், கறை திறையற்ற சபையை நான் காண ஆசிக்கிறேன், அப்பொழுது பரிசுத்த ஆவி... சகோதரன் கிரகாம், இதுவே என் இருதயத்தின் வாஞ்சையாய் இருந்து வந்துள்ளது; அதாவது, சபையானது தேவனால் முழுவதுமாக நிறைந்திருந்து, அதில் எங்கும் பாவம் தங்கியிருக்காமல், அது எங்கிருந்தாலும் தேவனுடைய ஆவியானவர் அழைத்துக் கொள்ள வேண்டும். அதை நான் காண விரும்புகிறேன். நான் விரும்பும் ஒரு காரியம், நான் கர்த்தரிடத்திலிருந்து பெற வாஞ்சித்த மகத்தான தரிசனத்தை அவர் அன்று காலை பத்து மணிக்கு எனக்களித்தார். அது என் விருப்பத்தை நிறைவேற்றினது. நான் போதகரான முதற்கொண்டு அநேக ஆண்டுகளாக அதை காண வாஞ்சித்தேன், முடிவில் அது நிறைவேறினது. இப்பொழுது நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அதைக் குறித்து நான் ஒன்றுமே கூறவில்லை, அதை எழுதி மாத்திரம் வைத்துக் கொண்டேன். அது நான் எப்பொழுதும் வேண்டிக் கொண்ட விதமாகவேயுள்ளது என்று அறிந்திருக்கிறேன். 14இப்பொழுது நான் ஜெபம் செய்து தேவன் பேரில் நம்பிக்கையுள்ளவனாயிருக்கிறேன். இன்றிரவு இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, என் வாழ்க்கையில் உள்ள ஒரு பெரிய வாஞ்சை தேவனுக்கு முன்பாகவும் அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் மிகுந்த தாழ்மையாய் இருப்பதே. நான் பொது ஜனங்களிடம் அவ்விதமாக ஈடுபட வேண்டியிருப்பதால், அது எனக்கு முன்பு இருந்ததிலிருந்து பெரும்பாலான பாகத்தை எடுத்துக் கொண்டது, அதுவே என் பெரிய தவறுகளில் ஒன்று என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனக்கு முன்பிருந்த சந்தோஷத்தை தேவன் திரும்பவும் எனக்குத் தருவார் என்று நம்புகிறேன். என் சந்தோஷத்தை நான் இழந்து போனேன் என்று அர்த்தமில்லை, இல்லை. எனக்கு அது அதிகம் வேண்டும் என்றே நான் கூறுகிறேன். கர்த்தரை சேவிக்க எனக்கு இன்னும் அதிகமான தாழ்மை வேண்டும். வரப்போகும் ஆண்டில் அவர் எனக்கு ஆயுசையும், சுகத்தையும், பெலத்தையும் தருவாரானால், என் முழு இருதயத்தோடும் நான் தேவனுக்கு ஊழியக்காரனாகவும், மனிதருக்கு சகோதரனாகவும் இருப்பேன் என்று தேவனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் சற்று நேரம் தலை வணங்குவோம். 15பிதாவே, உலகமானது பூமத்திய ரேகையை சுற்றி வருகிறதென்று நாங்கள் கற்பிக்கப்பட்டுள்ளோம். அது மறுபடியுமாக அதை நோக்கி வந்து... ஆண்டின் குறுகிய பகல் என்பதிலிருந்து நீண்ட பகலாக அது மாறும். இன்னும் சிறிது நேரத்தில் விசில்கள் ஊதப்படும். ஜனங்கள் கூச்சலிடுவார்கள், மணிகள் ஒலிக்கத் தொடங்கும், பழைய ஆண்டு கழிந்து புதிய ஆண்டு வரும். பிதாவே, நாங்கள் இந்த 1961ம் ஆண்டை காணச் செய்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். நன்மையான ஒன்றை நாங்கள் செய்திருப்போமானால், உம்முடைய நாமம் துதிக்கப்படுவதாக, ஏனெனில் அது அபாத்திரரான நாங்கள் அல்ல, அது நீரே. முடிவில் பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் வாழ்க்கையில் நுழைந்து, எங்கள் கீழ்ப்படியாத சுபாவத்தை மாற்றி தேவனை மகிமைப்படுத்தக் கூடிய ஒன்றை செய்யக் காரணமாயிருந்தார். அவர் அப்படி செய்ததற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். பிதாவே, ஒவ்வொரு முறையும் அவர் எங்களை நெருக்கி ஏவி, எங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் செய்யப்படக்கடவதென்று இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். 16இன்றிரவு எங்கள் கூட்டு சபையோரும், அவர்களுடைய போதகர்களும் இங்கு அமர்ந்துள்ளனர் (எங்கள் சகோதரன் கிரகாம், ஊடிகா, செல்லர்ஸ் பர்க், ஜார்ஜ்டவுன் இன்னும் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து) விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள், நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த பூமியில் எங்களுக்குதவி செய்ய இங்கு வந்து கூடியுள்ளனர். இந்த நேரத்தை அவர்கள் பாடல்கள் பாடுவதிலும், ஜெபம் செய்வதிலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதிலும் செலவிட வந்துள்ளனர், ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்புவீராக. எல்லா சந்தேகங்களையும் அகற்றுவீராக. எல்லா பயத்தையும் எடுத்துப் போடுவீராக, எல்லா சோர்வையும் எடுத்துப் போடுவீராக. பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் இருதயங்களில் அசைவாடி, வார்த்தையை விதைப்பாராக. வார்த்தை விழும் வயலாக நாங்கள் அமைந்திருந்து, வரப்போகும் ஆண்டில் அது அதிக பெலனைத் தருவதாக. கர்த்தாவே, இதை அருளும். 17இது என் நேரம், எனக்குதவி செய்யும், நான் பேசுவதற்கான நேரம் இது. பேசப்படும் வார்த்தைகளை நீர் அபிஷேகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அவை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் மிகுந்த எதிர்நோக்குதலுடன் புறப்பட்டு சென்று, உம்மை அறியாத மக்களை உம்மிடம் கொண்டு வருவதாக; இங்குள்ளவர்கள் உம்மை சேவிக்கத் தக்கதாக அதிக விசுவாசத்தைப் பெற அவை உதவி செய்வதாக. கர்த்தாவே, இதை அருளும். என் குரலுக்கு உதவி செய்யும். எனக்கு பயங்கர ஜலதோஷம் பிடித்திருக்கிறது. இன்று காலை நான் அளித்த நான்கு மணி நேர செய்தியின் விளைவாக களைப்புற்றிருக்கிறேன். நீர் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். எங்கள் அனைவருக்கும் உதவி செய்யும். வரப்போகும் ஆராதனைக்கும் இராப்போஜனத்துக்கும் எங்களை ஆயத்தப்படுத்தும். இந்த சபையும், அதன் போதகர் எங்கள் சகோதரன் நெவில்லையும், அதன் தர்மகர்த்தாக்களையும் டீகன்மார்களையும் ஆசீர்வதியும். இந்த ஆண்டில் அவர்கள் முன்பு எப்பொழுதும் செய்யாத அளவுக்கு உமக்கு தீரமாக உழைக்க அருள் புரியும். அவர்களுடைய ஊழியத்துக்காவும் தீரத்துக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். என்னுடன் யாராகிலும் நிற்க அவசியமாயிருந்த நேரத்தில் அவர்கள் எவ்வளவாக என்னுடன் நின்றனர். துன்ப நேரங்களில் சகோதரன் நெவிலும், சகோதரன் ராய் ராபர்சனும், மற்றும் விலையேறப் பெற்ற சகோதரர் அனைவரும் துணை நின்று, பரிசுத்த ஆவியின் தலைமையில், அவர்களுக்கு தெரிந்த மட்டில் தீர்மானங்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீர்மானங்கள் உம்முடைய சித்தத்தின்படி அமைந்திருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் அவர்களுடைய தீர்மானங்களை நீர் ஆசீர்வதித்தீர். தேவனே, நீர் தொடர்ந்து அவர்களோடு கூட இருப்பீராக. இப்பொழுது எங்கள் அனைவருக்கும் ஒருமித்து உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 18வேத வசனங்களை எழுதிக் கொள்பவராகிய உங்களுக்கு, நீங்கள் எனக்காக ஜெபம் செய்கிறீர்களென்று நம்புகிறேன். நியாயாதிபதிகளின் புத்தகத்திலுள்ள ஒரு பாகத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 6ம் அதிகாரம், 7ம் வசனம் முதல் நீங்கள் அமைதியாக வசனத்தைக் கேளுங்கள். பின்னாலுள்ளவர்கள் நான் பேசுவதை நன்றாக கேட்க முடிகிறதா? கேட்க முடிந்தால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். ஒலிபெருக்கிக்கு பொறுப்பாயுள்ள பொறியாளர் சத்தம் பின்னால் சரியாக கேட்கும்படி கவனித்துக் கொள்ளவும். ஒலிநாடாக்கள் பதிவாகின்றனவா? 19நியாயாதிபதிகள் 6ம் அதிகாம், 7ம் வசனம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், ஏனெனில் இன்னும் சில நேரத்தில் இதை குறிப்பிடப் போகின்றேன். இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதே போனீர்கள் என்கிறார் என்று சொன்னான். அதற்குப் பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான். கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு தரிசனமாகி; பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டு வரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச் சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். நியாயாதிபதி 6: 7-14. தேவனுக்குப் பிரியமாயிருக்குமானால், நான் இதிலிருந்து ஒரு பொருளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது 14ம் வசனம் என்று நினைக்கிறேன்... தேவன் எங்களோடே இருந்தால், இந்த அற்புதங்களெல்லாம் எங்கே? என்று கூறும் வசனம். 20இஸ்ரவேலரின் நியாயாதிபதிகளின் புத்தகம் நாமனைவரும் நன்கு அறிந்த ஒரு புத்தகம். அவர்கள் எப்படி இஸ்ரவேலரை ஒடுக்கினார்கள். பெலிஸ்தியர், மீதியானியர், எமோரியர், மற்றும் வெவ்வேறு ஜாதியினர் வெட்டுக்கிளிகளைப் போல் இஸ்ரவேலரின் மேல் இறங்கி, அவர்களுக்கிருந்த அனைத்தையும் பட்சித்து போட்டு, கொள்ளையடித்து சென்றுவிட்டனர். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, இஸ்ரவேல் ஜனங்கள் முதலில் தேவனை விட்டு விலகிப்போகும் வரைக்கும், அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை. அதுபோன்று நீங்களும் தேவனை விட்டு விலகும் வரைக்கும், பிசாசு உங்கள் மேல் காலடி எடுத்து வைக்க முடியாது. அதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவதொன்று நேரிடும்போது, நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கின்றீர்களா இல்லையா என்றும், நீங்கள் தேவனுடன் சரியான இடத்தில் இருக்கிறீர்களா என்றும் சோதித்துப் பாருங்கள்; அப்பொழுது பிசாசு உங்களுக்கு ஒரு கெடுதியும் செய்ய முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றீர்கள். 21நாம் படித்து இங்கு விட்ட இந்த இடத்தில்... இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தெபொராள் என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசியானவளும் பாராக்கும் இருந்தனர்; தெபொராள் தீர்க்கதரிசனம் உரைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாள். அவள் சொன்னது அப்படியே நிறைவேறினது (அந்த மகத்தான வீரனான பாராக்) அவர்கள் சத்துருவின் மேல் வெற்றி சிறந்ததை ஒரு பாடலாகப் பாடினார்கள். ஆனால் அவர்கள் அந்த உணர்ச்சியிலிருந்து மாறினவுடனே, தங்கள் பழைய வழிக்கே திரும்பச் சென்றுவிட்டனர். இன்றைய சபையின் நிலையும் அவ்வாறேயுள்ளது! அது ஒரு உணர்ச்சியிலிருந்து மாறினவுடனே வேறொரு உணர்ச்சிக்கு சென்றது. ஆனால் செயல்பட வேண்டிய நேரம் வந்தது. அவ்வாறே இன்னும் உள்ளது. செயல்பட வேண்டிய நேரம் இப்பொழுது வந்துவிட்டது. தேவனுடன் சபை விளையாட்டு விளையாடுவது போன்றவைகளை நிறுத்த நேரம் வந்துவிட்டது. இன்னும் சபை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்க முடியாது. நாம் மும்முரமாக செயலில் ஈடுபட வேண்டும். சபை விளையாட்டு விளையாடுவது, பக்தி விளையாட்டு விளையாடுவது, நீதி விளையாட்டு விளையாடுவது, போன்றவைகளை நிறுத்த நேரம் வந்துவிட்டது என்றும், செயல்பட நேரம் வந்துவிட்டது என்றும் இன்றிரவு அதே தேவன் ஜனங்களின் இருதயத்தில் உணர்த்துவார் என்று நம்புகிறேன். இன்று காலை நான் மறுபிறப்பு என்னும் பொருளின் பேரில் பேசினேன், நாம் எப்படி மறுபிறப்படைவது என்று நான் கூறினேன். அது நிச்சயமாக உங்கள் இருதயங்களில் இப்பொழுதும் பதிந்திருக்கும். நீங்கள் சத்தியம் என்று அறிந்திருப்பதன் பேரில் செயல்பட இப்பொழுது நேரம் வந்துவிட்டது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை முதலாவதாக அறிந்து கொள்ளாமால் நீங்கள் விசுவாசத்துடன் செயல்பட முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது நீங்கள் செய்வதில் உங்களுக்கு விசுவாசம் உண்டாயிருக்கும். 22ஒரு முறை பிரபலமான மருத்துவர் ஒருவர் என்னிடம், வியாதிப்பட்டிருந்த ஒருவருக்கு நடந்த அற்புதத்தைக் குறித்து கூறிக் கொண்டிருந்தார். அவர், ''பிரசங்கியே, ஜனங்களிடம் ஒரு மரத்தையோ அல்லது கம்பத்தையோ தொடும்படி நீங்கள் கூறினால், அது நிகழும் என்று நீங்கள் விசுவாசிப்பதில்லையா?'' என்று என்னிடம் கேட்டார். நான், ''அப்படி ஒருக்காலும் நடக்காது, ஐயா. ஏனெனில் ஒரு மரத்தையோ அல்லது கம்பத்தையோ ஒருவன் தொடும்போது, அவனுக்கு விசுவாசம் இருக்காது'' என்றேன். விசுவாசம் என்பது அவ்வளவு தளர்ந்த ஒன்றல்ல. அது ஏதாவது ஒரு உண்மையின் பேரில் ஆதாரம் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு ஒன்றின் பேரில் விசுவாசம் உள்ளதற்கு முன்பு, நீங்கள் அதைக் குறித்து ஏதாவதொன்றை அறிந்த பிறகே அதன் மேல் விசுவாசம் வைக்க வேண்டும். முதலாவது நீங்கள் எப்படி, என்னவென்றும், தேவனுடைய விருப்பம் என்னவென்றும் தேவனுடைய திட்டம் என்னவென்றும், அந்த திட்டத்தின் மூலம் தேவனை எப்படி அணுக வேண்டுமென்றும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது நாம் தைரியமாக கிருபாசனத்தண்டையில் நடந்து சென்று, அந்த திட்டம் நமக்கு என்ன வாக்குத்தத்தம் செய்துள்ளதோ அதை கெஞ்சிக் கேட்க முடியும். 23இப்பொழுது, அவர்கள் சபை விளையாட்டு விளையாடிக் கொண்டு வந்தனர். அவர்கள் ஒரு உணர்ச்சியிலிருந்து விலகினவுடனே... தேவன் அவர்களை விடுவித்தார். அவர்கள் தேவனுடைய வல்லமையான கரத்தை உணர்ந்து அவரைச் சேவிப்பதற்கு பதிலாக, அவர்கள் மீண்டும், உலகத்தின் காரியங்களுக்கு சென்றுவிட்டனர். அப்பொழுது தேவன் அதை நிறுத்துவதற்கான நேரம் வந்தது. அப்படித்தான் அது இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பவைகளை நிறுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன், உலகத்திலுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் பொருந்தும்படியாக நாம் தேவனுடைய வார்த்தையை திரித்துவிட்டோம். மனிதன் போட்ட ஒவ்வொரு திட்டத்தோடும் பொருந்துவதற்காக நாம் தேவனுடைய வார்த்தையை இப்படி திரித்தோம், அப்படி திரித்தோம், திட்டங்களுடன் பொருந்துவதற்காக வெவ்வேறு வழிகளில் வார்த்தையை நாம் திரித்தோம். ஆனால் நீங்கள் சபை விளையாட்டை விளையாடுவதை நிறுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது. ஜனங்கள், ''ஆவியில் நடனமாடுவதற்கு போதிய ஆவியை நீங்கள் பெற்றுக் கொண்டால், உங்கள் கண்களுக்கு முன் வெளிச்சத்தை காண முடிந்தால், அல்லது ஒரு விதமான உணர்ச்சி உங்கள் முதுகில் ஓடி, உங்களுக்கு சிறிது நடுக்கம், சிறிது குலுக்கல், சிறிது உணர்ச்சி ஏற்பட்டால், நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள்“ என்கின்றனர். நீங்கள் ஏதோ ஒன்றை பெற்றுக் கொண்டீர்கள் என்பது உண்மையே, ஆனால் அது என்ன விதமான கனியைக் கொடுக்கிறது என்பதை நான் காணாமல், நீங்கள் பெற்றுள்ளது என்னவென்று நான் கூறமாட்டேன். இன்று காலை நாம் பார்த்த விதமாக, ஒரு குழந்தை பிறக்கும் போது அது மனிதனாக பிறக்க முடியாது. அது குழந்தையாகப் பிறந்து பின்பு மனிதனாக வளர வேண்டும். அவ்வாறே நாம் கிறிஸ்துவில் வளர்ந்து, முழு வளர்ச்சியை அடைகிறோம். ஏதோ ஒன்று... இன்றிரவு ஒருவர் இரட்சிக்கப்பட்டு அவர் நாளை சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்பதல்ல. நாம் மனிதனாக வளருகிறோம், கிறிஸ்துவின் பூரண வளர்ச்சியை அடைகிறோம். 24இப்பொழுது, தேவனுடைய மக்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொள்ளும் போது, அவர்களை விடுவிக்க தேவன் எப்பொழுதும் உண்மையான வார்த்தையுடன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார். தேவனுடைய மக்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொண்ட போது, தேவன் தமது வார்த்தையை அனுப்பாத ஒரு நேரமே கிடையாது. இன்று காலை நாம் பார்த்த விதமாக, அவருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் வருகிறது. அது தேவனுடைய வார்த்தையின்படி உள்ளதா என்று அறிந்து கொள்ள நீங்கள் அதை சோதித்து பார்க்கிறீர்கள், அது தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திருந்தால், அப்பொழுது அந்த வார்த்தை உயிர்பெறும். அநேகர், ''இது எங்கள் சபையின் தீர்க்கதரிசி“, ''இது எங்கள் சபையின் தீர்க்கதரிசி'' என்று கூறிக் கொள்கின்றனர். இரண்டு பேர், ஒருவருக்கொருவர் முரணாயிருந்தால் ஏதோ தவறிருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றையே கூற வேண்டும். அப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் முரணானவைகளைப் பேசாமல், இந்த வார்த்தை கூறுவதை அப்படியே எடுத்துக் கூறுவோம். அப்படித் தான் ஒரு உண்மையான தீர்க்கதரிசி சோதிக்கப்படுகின்றான். அவனிடம் வார்த்தை உள்ளதா என்று வேதாகமம், “அவர்களுடைய சாட்சி, பிரமாணத்துக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஏற்றபடி இராமல் போனால், அவர்களுக்குள் வெளிச்சம் இல்லை'' என்கிறது. அது உண்மை. அது வார்த்தையின்படி இருக்க வேண்டும். 25தேவன் எப்பொழுதுமே, ஒவ்வொரு சமயத்திலும், தமது ஜனங்களிடம், உண்மையான தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வரும் உண்மையான ஊழியக்காரனை, உண்மையான தீர்க்கதரிசியை அனுப்புகிறார். தேவனுடைய வார்த்தை தான் ஜனங்களை எப்பொழுதும் விடுவிக்கிறது. இப்பொழுது நாம் திரும்பி சென்று, 7ம் வசனம் முதல் 10ம் வசனம் முடிய படிப்போமானால் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை விட்டு விலகி உலகத்திற்கு மறுபடியும் சென்றுவிட்டனர் என்று நாம் காண்கிறோம், எங்கிருந்தோ ஒரு தீர்க்கதரிசி வருகிறான். அவனுடைய பெயரும் கூட வேதத்தில் சொல்லப்படவில்லை. தீர்க்கதரிசி தன் பெயரைக் குறிப்பிட வேண்டுமென்று சிரத்தை கொண்டிருந்திருக்கமாட்டான் என்று நினைக்கிறேன். அவன் ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் சிரத்தை கொண்டிருந்தான்; தேவன் அவனை அபிஷேகித்திருந்தார். அவன் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாக கருதப்பட்டானோ அல்லது அவன் பேராயராகவோ அல்லது தலைமை பேராயராகவோ இருந்தானோ; இவையெல்லாம் அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. அவன் சிரத்தை கொண்டிருந்த ஒன்றே ஒன்று, அவனுடைய இருதயத்திலிருந்த செய்தி மாத்திரமே. அவன் ஜனங்களை மனந்திரும்பும்படி அழைத்து, அவர்களுடைய தேவன் பராக்கிரமமுள்ள தேவன் என்றும், விடுவிக்கும் தேவன் என்றும், அற்புதங்களைச் செய்யும் தேவன் என்றும், அவர் அவர்களை எகிப்தியரின் கைகளின்று அவர்களைப் பிடுங்கி, சிவந்த சமுத்திரத்தைப் பிளந்து, வனாந்தரத்தில் அவர்களைப் போஷித்தார் என்றும், அவர் மற்றவர்களிடமிருந்து தேசத்தைப் பிடுங்கி அதை அவர்களுக்குக் கொடுக்க வல்ல பராக்கிரமம் பொருந்திய தேவனாயிருக்கிறார் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினான். ஆமென்! அவன் தான் உண்மையான தீர்க்கதரிசி. அவன் அபிஷேகிக்கப்பட்டு, அந்த ஜனங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருந்தான். அவர்கள் துன்பத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்ததால், அவர் அப்படிப்பட்டவராயிருக்கிறார் என்று எடுத்துக் கூறினான். 26இந்த மீதியானியர்களும், எமோரியர்களும், மற்றவர்களும் அவர்கள் மேல் படையெடுத்து வந்து, அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றினர். சத்துரு சவால்விட்டான், அது சந்திக்கப்பட வேண்டும்! அவர்களுடைய சேனைகளால் அதை செய்ய முடியவில்லை, அவர்களுடைய ஆசாரியர்களால் அதை செய்ய முடியவில்லை, அவர்களுடைய சபைகளால் அதை செய்ய முடியவில்லை. எனவே சத்துருவின் சவாலை சந்திக்க தேவனுடைய வார்த்தை அவசியமாயிருந்தது. அதுபோன்று, இன்று சத்துரு பேசுகிறான். அவன், அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒன்று கிடையாது. இவையனைத்தும் உணர்ச்சியே, அவர்கள் உணர்ச்சி வசப்படுகின்றனர் என்று கூறுகிறான். எனவே சத்துரு சவால்விட்டிருக்கிறான், அவனுடைய சவால் சந்திக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஸ்தாபனங்கள் ஜனங்களை அழைத்து அவர்களை இந்த ஸ்தாபனத்தில் அந்த ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய பெண்கள் தலைமயிர் கத்தரித்துக் கொள்ளவும், அழகூட்டும் பொருட்களை உபயோகிக்கவும் ஆண்கள் எல்லாவகையான வாழ்க்கையும் வாழ்ந்து, அதே சமயத்தில் சபையின் தர்மகர்த்தாக்களும் டீகன்களுமாயிருந்து, அவர்களுக்கு பிஎச்.டி., எல்எல்டி., பட்டங்கள் உள்ளதால் அவர்களை போதகர்களாக அமர்த்தியிருக்கும் இந்நாளில் சவாலை சந்திக்கக்கூடிய ஒரே வழி, இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பதை பெற்றிருப்பதே. ஒரு மனிதன், டாக்டர் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கவில்லை. இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது என்னவெனில், உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள். அதன் பிறகு நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்பதே. அதுதான் சத்துருவின் சவாலை சந்திக்கமுடியும். அது அவனுடைய நாளில் அவனுடைய சவாலை சந்தித்தது, அது இந்நாளிலும் சந்திக்கும். 27நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 7 முதல் 10 வசனங்களில், தீர்க்கதரிசி வருவதை நாம் காண்கிறோம். 1 முதல் 7 வசனங்களில், ஜனங்கள் விழுந்து போகிறதை நாம் காண்கிறோம். 7 முதல் 10 வசனங்களில் தீர்க்கதரிசி தோன்றி ஜனங்களுக்கு பரிகாரம் அளிப்பதை நாம் காண்கிறோம். கவனியுங்கள், அவன் எங்கிருந்து வந்தானென்று நமக்குத் தெரியாது. அங்கு ஒரு பரிசேயன் இருந்தான், அவன் சிறிது காலம் ஆசாரியனாக பணியாற்றினான் என்று கூறப்படவில்லை. அவனுடைய விவரம் எதையுமே வேதாகமம் அளிக்கவில்லை. இந்த தீர்க்கதரிசிகள் ஒன்றுமே தெரியாத இடத்திலிருந்து எழும்பி வருகின்றனர். 28எலியாவைப் பாருங்கள், எழும்பின மகத்தான தீர்க்கதரிசிகளில் அவன் ஆறாவதும் கடைசி தீர்க்கதரிசியுமானவன். அவனுடைய விவரமும் நமக்கு ஒன்றும் தெரியாது. அவன் எந்த பள்ளிக் கூடத்துக்கு சென்றான் என்றும் நமக்கு தெரியாது. அவன் எப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தான் என்றும் நமக்கு தெரியாது. அவனைக் குறித்து நாம் அறிந்துள்ள ஒன்றே ஒன்று, தேவன் அவனுடன் இருந்தார் என்பதே. அவன் புறப்பட்டு வருகிறான். அதே ரகசியமான விதத்தில் அவன் இந்த இடத்தை விட்டு செல்லுகிறான். அவன் யாரும் அறியாத இடத்திலிருந்து, எங்கோ வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வருகிறான். அவன் திரும்பவும் வனாந்தரத்துக்குச் சென்று அக்கினி இரதத்தில் ஏறி சுழல்காற்றில் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறான். அவனுக்கு வேதசாஸ்திர அறிவு எதுவுமில்லை. அவன் எங்கிருந்து வந்தான், அவனுடய தகப்பன் யார், தாய் யார், அவனுடைய சகோதர சகோதரிகள் யார் போன்ற விவரம் ஒன்றும் நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, அவன் தேவனுடைய மனிதன் என்பதே. தேவன் அவனை ஒன்றுமில்லாத இடத்திலிருந்து தெரிந்து கொண்டு, அவனை உபயோகித்து, அவனை ஏதோ ஓரிடத்துக்கு தம்முடைய சமுகத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். அவன் தேவனுடைய மனிதனாயிருந்தான். 29இங்கு அந்த நேரத்துக்கான ஒரு தீர்க்கதரிசி புறப்பட்டு வந்து, அவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை உரைக்கிறான். அவன் மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரத்தை அவர்களுக்கு அளிக்கவில்லை. அவன், ''உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, என் பலத்த கரத்தையும், என் வல்லமையும் காண்பித்த கர்த்தர் நானே“ என்றான். கிதியோன் அங்கு உட்கார்ந்து கொண்டு அதை கேட்டிருப்பான் என்று எண்ணுகிறேன். ''இவைகளைச் செய்த தேவன் நானே. உங்களுக்காக இவைகளைச் செய்தேன். ஆயினும் என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போனீர்கள். இவைகள் ஒன்றிலும் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை.'' 30நீங்கள் வேறொன்றை கவனிக்க விரும்புகிறேன். அது உங்களை உற்சாகப்படுத்தும். தீர்க்கதரிசியின் செய்திக்குப் பின்பு உடனடியாக கர்த்தர் காட்சியில் தோன்றினார். ஆமென்! தீர்க்கதரிசி செய்தியைக் கொடுத்து முடித்தவுடனே, கர்த்தர் ஒரு மரத்தின் கீழ் காணப்பட்டார். தீர்க்கதரிசியின் செய்திக்குப் பிறகு கர்த்தர் வந்து ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தார். தீர்க்கதரிசி அளித்தான்... ஜனங்கள் தங்கள் சொந்த தத்துவங்களை உண்டாக்கிக் கொண்டு விழுந்து போயினர். தேவன் தமது தீர்க்கதரியை அனுப்பினார். தீர்க்கதரிசி தன் செய்தியைக் கூறி முடித்தவுடனே, அவர்களை விடுவிப்பதற்கென கர்த்தர் தீர்க்கதரிசியின் செய்தியைப் பின் தொடர்ந்து அங்கு வந்தார். ஓ, நாம் கம்பீரமான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசி காட்சியிலிருந்து மறைந்தவுடனே என்ன நடந்தது? கர்த்தர் காட்சியில் வந்தார்! யோவான் காட்சியிலிருந்து மறைந்தவுடனே, கர்த்தர் காட்சியில் வந்தார்! தேவன் விசித்திரமான வழிகளில் செயல் புரிகிறார். 31இங்கு நாம் படித்த வேத பாகத்தில், கிதியோன், மீதியானியர் அவனைக் கண்டு பிடிப்பதற்கு முன்பாக, ஆலைக்குச் சமீபமாய் அவனுக்குப் போதுமான கோதுமையை போரடிக்கிறதாக நாம் காண்கிறோம். அவனுக்கும் அவன் தந்தைக்கும் போதுமான குளிர் கால உணவை அவன் சத்துருக்கள் காணாதபடிக்கு ரகசியமாக போரடிக்கிறான். ஏனெனில் அவர்கள் வெட்டுக்கிளிகளை போல் இறங்கி வந்து, அவர்களுக்கிருந்த எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டார்கள். 32பிசாசும் அப்படியே செய்கிறான். நாம் ஒரு சிறு சபையை துவங்குகிறோம், எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது. எத்தனை போதகர்கள் இது உண்மையென்று அறிவார்கள்? எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில், வஞ்சகன் ஒருவன் அந்த குழுவில் நுழைந்து அதை தாறுமாறாக்கி, அவனால் கூடுமானால், அந்த சபையை அந்த மனிதனிடமிருந்து பறித்துக் கொள்கிறான். பாருங்கள், அது பிசாசு வெட்டுக்கிளிகளைப் போல வந்து, அளிக்கப்பட்டதை பறித்துக் கொள்வது. இப்பொழுது... 33கிதியோன் நிச்சயமாக வேதப்பிரகாரமான ஒரு மனிதனாயிருந்தான். கர்த்தருடைய தூதன் அவனிடம் கூறினபோது... நீங்கள் கவனிப்பீர்களானால், அது கர்த்தருடைய தூதன் அல்ல. அது கர்த்தர். ''கர்த்தர் என்பது கொட்டை (L-O-R-D)'' எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அது தூதன் அல்ல, அது தேவன். அது தியோஃபனியில் தேவன் மனித உருவில் காணப்படுதல், அவர் ஆபிரகாமுக்கு வனாந்தரத்தில் மனித உருவில் காணப்பட்டது போல் அவர் தூதைக் கொண்டு வந்த தூதுவனாதலால், கர்த்தருடைய தூதன் என்று அழைக்கப்படுகிறார். அவர் அவனுக்கு தரிசனமானார். அவர் “பராக்கிரமசாலியே'' என்றார். அவர் அவனை தெரிந்து கொண்டு அவன் மூலம் இஸ்ரவேலரை விடுவிக்கப் போவதாக கூறினார். 34கிதியோன் இந்த கேள்வியைக் கேட்டான். அவன் வேதப்பிரகாரமான எப்படிப்பட்ட மனிதன் அப்படிப்பட்ட மனிதனிடம் தேவன் வருகிறார். வேதம் அறிந்த ஒருவரிடம், கிதியோன், “கர்த்தர் எங்களோடே இருந்தால் - நீர் தூதன் - தீர்க்கதரிசி எங்களிடம் கூறின அற்புதங்களெல்லாம் எங்கே?” என்று கேட்டான். தேவன் செல்லும் இடமெல்லாம் அவருடைய அற்புதங்கள் அவரைத் தொடருமென்று அவன் அறிந்திருந்தான். தேவன் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் அற்புதங்கள் நிகழுமென்று அவனுக்குத் தெரியும். அற்புதங்களை விசுவாசிக்காத ஜனங்களின் மத்தியில் இன்று தேவன் கிரியை செய்வாரென்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அது எப்படி முடியும்? அவர் கிதியோனை “பராக்கிரமசாலியே” என்றழைத்தார். அவர், “இதன் மூலம் நீ இஸ்ரவேலரை விடுவிக்கப் போகிறாய் என்றார்.” அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது ஒரு மனிதனைப் போலிருந்தது, அது மனிதனே. கிதியோன் அவரை உற்று நோக்கினான், அவன், ''இல்லை, என் ஆண்டவரே, தேவன் எங்களோடே இருந்தால், இந்த துன்பங்கள் எல்லாம் எங்கள் மேல் எதற்காக வரவேண்டும்? எங்களிடம் கூறப்பட்ட அற்புதங்கள் எங்கே? தேவன் முன்பு புரிந்த செயல்கள் எங்கே?'' என்று கேட்டான். 35தூதன் சரியா இல்லையா என்று சோதித்து பார்க்க ஒரு நல்ல வழியுண்டு. அவர் தேவபக்தியின் வேஷத்தை தரித்திருந்தால், அற்புதங்களை செய்யும் அந்த பெலனை அவர் மறுதலிப்பார். அவர் தேவனிடத்திலிருந்து வந்த தூதனாயிருந்தால் அவர் அதைக் குறித்து பேசுவது மாத்திரமல்ல, அற்புதங்களைச் செய்யவும், அவர் குறிப்பிடும் தேவன் அவரோடும் அவருக்குள்ளும் இருக்கிறார் என்பதைக் காண்பிக்கவும் அதை பெற்றிருப்பார். கிதியோன், “தேவன் எங்களோடு இருந்தால், அவருடைய மகத்தான அற்புதங்களெல்லாம் எங்கே? ஏனெனில், நாங்கள் அறிந்துள்ளபடி...'' என்றான். கிதியோன் எவ்வளவு வேதப்பிரகாரமாக இருந்தான் என்பதை கவனியுங்கள். வேறு விதமாகக் கூறினால், அவன், ''தேவன் மகத்தான கிரியைகளைச் செய்யும் தேவன் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் அற்புதங்களைச் செய்யும் மகத்தான தேவன். அவர் எங்கள் பட்சத்தில் இருந்தால், அவர் எங்களோடு இருந்தால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால், அவருடைய அற்புதங்களை நான் எங்கே காணலாம்? அவர் நமது பட்சத்தில் இருந்தால், அவர் எங்கே இருக்கிறார்?'' என்றான். 36அந்த பராக்கிரமசாலி தேவனுடைய வார்த்தையைக் குறிப்பிட்டு, அது உண்மையென்று அறிந்திருந்தான். தேவன் இயற்கைக்கு மேம்பட்டவர் என்று அவனுக்கு நன்றாக தெரியும். இயற்கைக்கு மேம்பட்டவர் இருக்கும் இடத்தில், அவருக்குள் இருக்கும் இயற்கைக்கு மேம்பட்ட தன்மையின் காரணமாக, இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்வார். அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது. காற்று அடிக்கும் திசையில் நீங்கள் நின்று கொண்டு, காற்று உங்கள் முகத்தில் அடிப்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? நீங்கள் நனையாமல் எப்படி தண்ணீருக்குள் செல்ல முடியும்? தண்ணீர் ஈரத்தை உண்டாக்கும் ஒன்று. அதன் ரசாயனத் தன்மை அப்படிப்பட்டது. அது ஈரமுண்டாக்கும். நீங்கள் தண்ணீருக்குள் செல்லும்போது நனைந்தே தீருவீர்கள். உண்மை. அது போன்று நீங்கள் இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய சமூகத்தில் வரும்போது, இயற்கைக்கு மேம்பட்ட தேவனின் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களும் கிரியைகளும் காணப்படும். 37எனவே கிதியோன், “தேவன் எங்களோடு இருந்தால், அவருடைய கிரியைகள் எங்கே? அவருடைய அற்புதங்கள் எங்கே?'' என்றான். மகிமை! (சகோதரன் பிரன்ஹாம் நான்கு முறை கை கொட்டுக்கிறார் - ஆசி.) அது தான் பாருங்கள், தேவன் எங்கே இருக்கிறாரோ, அங்கு அற்புதங்கள் நடக்கும். தேவன் எங்கே இருக்கிறாரோ, அங்கு தேவனுடைய அடையாளமும் இருக்கும். பாருங்கள்? கிதியோன் மிகவும் வேதப்பிரகாரமாக, “இவைகள் எங்கே?'' என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், அவன், ”நான் ஐம்பது வயதான மனிதன்“ அற்புதங்கள் செய்த தேவனைக் குறித்து அவர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். நான் சபைக்கு சென்று ஆசாரியர்களை விசுவாசித்திருக்கிறேன். நான் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறேன். எழுதப்பட்ட வார்த்தையை, ''எல்லா சுருள்களிலுள்ள வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். தேவன் தமது ஜனங்களின் மத்தியில் வரும் போது ஏதாவதொன்று நடக்குமென்று நான் சுருள்களில் படித்ததுண்டு,'' என்றான். இந்த கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் மனிதன் யாரென்பதை கிதியோன் கண்டுகொள்ளவில்லை. ஆமென். அவர் மனிதன் என்று மாத்திரமே அவன் அறிந்திருந்தான். அவன், ''தேவன் எங்களோடு இருந்தால், அவருடைய அற்புதங்கள் எங்கே? அதை நாங்கள் காண வேண்டும்” என்றான். அது எவ்வளவு வேதப்பூர்வமானது இயற்கைக்கு மேம்பட்டது உள்ள இடத்தில், தேவனும் அவருடைய அடையாளமும் இருக்கும். தேவன் எங்கே இருக்கிறாரோ, அவருடன் தேவனுடைய அடையாளமும் இருக்கும். அது நமக்குத் தெரியும். அவர் தமது ஜனங்களுக்குள் இருந்தால், அவர்கள் அவருடைய அடையாளத்தை செய்வார்கள். அது முற்றிலும் உண்மை. 38''ஆம், தேவன் எங்கே!“ என்னும் கேள்வியைத்தான் கிதியோன் கொண்டிருந்தான். ''தேவன் ஒருவர் இருப்பாரானால், தேவன் எங்களோடு இருப்பாரானால், அவருடைய அடையாளத்தை நான் காணட்டும். அவர் அற்புதங்களைச் செய்கிறவர் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த பெரிய பணி எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தால்...'' என்றான். அங்கு நின்று கொண்டிருந்தவர் ஒருக்கால் வயோதியரைப் போல் காணப்பட்டிருப்பார். அவர் கையில் ஒரு கோல் இருந்ததாக வேதம் கூறுகிறது. நீங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அல்லது நாளை எப்பொழுதாவது 6ம் அதிகாரத்தை படித்துப் பாருங்கள். அவருடைய கையில் ஒரு கோல் இருந்தது. காண்பதற்கு அவர் வயோதிபரைப்போல் இருந்தார். அவர் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் கிதியோனை “பராக்கிரமசாலியே” என்றழைத்தார். தேவன் அதை செய்யப் போகிறாரென்று அவர் கூறினார். அவர், ''கர்த்தர் உன்னோடே இருக்கிறார்'' என்றார். அவன், ''அப்படியானால் அவருடைய அற்புதங்கள் எங்கே? இயற்கைக்கு மேம்பட்ட தேவன் இங்கிருந்தால், தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட கிரியைகள் எங்கே?'' என்று கேட்டான். 39இன்றிரவு சபைகளைக் குறித்து அதை எளிதாக கூறலாம். ''ஒரு காலத்தில் ஜீவித்த தேவன் எங்கே? அவர் மரித்துவிட்டாரா? அவர் போய்விட்டாரா? அவர் தொடர்கிறாரா? அவர் எங்காவது பயணம் சென்றிருக்கிறாரா?“. இல்லை, ஐயா. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் தேவனைச் சேர்ந்தவர்களென்றால், தேவன் எங்கே இருக்கிறார் என்று காண்போம். தேவனுடைய அடையாளங்களை நாம் காண்போம். இந்த கூடாரம் தேவனுக்காக நிற்குமானால், தேவன் நமது மத்தியில் அசைவாடுவதை நாம் காண்போம். இராஜ்யத்தில் ஆத்துமாக்கள் பிறப்பதை நாம் காண்போம். ஜனங்களுடைய வாழ்க்கை நேராவதை நாம் காண்போம். வியாதியஸ்தர், குருடர், செவிடர் மத்தியில் அவருடைய பலத்த கிரியைகள் நடப்பதை நாம் காண்போம். தேவன் நமது மத்தியில் இருப்பாரானால், ''தேவன் எங்களோடே இருந்தால், அவருடைய அற்புதங்கள் எங்கே?'' என்னும் கேள்வியை அவன் கேட்டான். 40தேவன் தமது ஜனங்களுடனும் தமது ஜனங்களுக்குள்ளும் இருந்தால், அவன்... அந்த மனிதன் தேவன் செய்த கிரியைகளையே தானும் செய்வான். ஏனெனில் அது இனிமேல் அந்த மனிதன் அல்ல. அந்த மனிதனுக்குள் இருக்கும் தேவன். அந்த மனிதன் பாவஞ் செய்வானானால், தேவன் அவனுக்குள் இல்லை. அவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால், தேவன் அவனுக்குள் இல்லை. தேவன் பாவத்துடன் ஈடுபடுவதில்லையென்று நமக்குத் தெரியும். அதற்கு ஆதாரமாக இன்னும் சிறிது நேரத்தில் ஒரு வேத வசனத்தை உங்களுக்குக் தருகிறேன். இயேசு இவ்வுலகில் இருந்தபோது, அவரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள், ''நீ மனிதனாயிருக்க, உன்னைத் தேவனுக்கு சமமாக்கிக் கொள்கிறாயே'' என்றனர். அவர் திமிர்வாதக்காரனை சொஸ்தப்படுத்தின போது, ''உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது'' என்றார். அவர்கள், ''ஒரு நிமிடம் பொறு! நீ மனிதனாயிருக்க, பாவங்களை மன்னிக்க உனக்கு அதிகாரம் ஏது?'' என்றனர். அவர் ''பூமியில் பாவங்களை மன்னிக்கவும் சுகப்படுத்தவும் மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியக் கடவர்கள். உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடவென்று சொல்வதோ, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எது எளிது?“ என்றார். அதன் பிறகு அவர் அந்த மனிதனுக்கு கட்டளையிட்டார். அவன் எழுந்து நடந்தான். பரிசேயர் அவரைக் கேள்வி கேட்டனர். 41இயேசு, ''என்னை விசுவசிக்காவிட்டாலும், நான் செய்யும் அடையாளங்களையாவது விசுவாசியுங்கள்'' என்றார். பாருங்கள், மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி எழும்புவாரென்றும் அவர் மேசியாவாயிருப்பாரென்றும் அவர்களுக்குக் கூறப்பட்டது. அவர், ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாவிட்டால், என்னை விசுவாசிக்காதீர்கள்; நான் தவறாயிருக்கிறேன். என் பிதாவின் கிரியைகளை நான் செய்தால், என்னை விசுவாசிக்காவிட்டாலும், என் கிரியைகளையாவது விசுவாசியுங்கள். கிரியைகள் என்ன செய்கின்றன? நான் யாரென்பதை அறிவிக்கின்றன. அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. அவைகளே என் சாட்சி. அவை நான் பிரஸ்பிடேரியன் சபையைச் சேர்ந்தவன் அல்லது பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்தவன் என்று காண்பிக்கும் சான்றிதழ்களோ அல்லது ஐக்கியச் சீட்டோ அல்ல. நான் செய்யும் கிரியைகள் தேவனுடைய அடையாளங்கள், மேசியாவின் அடையாளங்கள், என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் இவைகளே'' என்றார். 42யோவான் 14:12ல் (நீங்கள் வேதவாக்கியத்தை குறித்துக் கொள்ள விரும்பினால்) அது யோவான் 14:12ல், இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்றார். ஆமென்! அது என்ன, சகோதரரே? தேவன் நம் பட்சத்தில் இருந்தால், அவருடைய அற்புதங்கள் எங்கே? தேவன் நமக்குள் இருந்தால், நமக்கு என்ன நேர்ந்தது? எங்கோ ஏதோ தவறுள்ளது - ஆம். இயேசு, “நான் சொல்வதை நீங்கள் விசுவாசிக்காவிட்டால், என்னைக் குறித்து எவை சாட்சி கொடுக்கின்றன என்பதை கவனித்து வாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே. உங்கள் தேவனாகிய கர்த்தர் மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி உங்கள் மத்தியில் எழும்புவார். அந்த தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றார். மேசியாவை ஒரு அடையாளம் தொடர வேண்டும். மேசியாவின் அடையாளத்தை நான் செய்யாமல் போனால் என்னை விசுவாசியாதேயுங்கள்'', ''ஆனால் மேசியாவின் அடையாளம் என்னைக் குறித்து சாட்சி கொடுத்தால், அந்த அடையாளத்தையாவது விசுவாசியுங்கள். ஏனெனில் நான் தவறென்று நீங்கள் கருதினால், அடையாளம் உண்மையாயிருக்க வேண்டும். ஏனெனில் அது வேதப்பூர்வமானது என்றார்.” அல்லேலூயா! 43அங்கு தான் கிதியோன் அடைய முயன்றான். அங்கு தான் கிதியோன் நின்று கொண்டிருந்தான். “ஓ, எங்களோடு தேவன் இருப்பாரானால், அவர் தேவன் என்னும் அடையாளத்தை நாங்கள் காண விரும்புகிறோம். அவர் அதே தேவனென்றால் அதே அடையாளங்களை செய்வார் என்றான்”. தேவன் என்ன செய்தார்? கிதியோன், “சற்று பொறும், நான் சென்று என் காணிக்கையைக் கொண்டு வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஒரு வெள்ளாட்டுக் குட்டியை கொன்று சமைத்து, அப்பங்களை ஆயத்தப்படுத்தி, இவைகளை அவரிடத்தில் கொண்டு வந்து வைத்தான். கர்த்தருடைய தூதன், “நீ திரும்பி வருமட்டும் நான் இருப்பேன்'' என்றார். எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள். வார்த்தையைக் கொண்டு சோதித்து பாருங்கள். தூதன், ''நான் காத்திருப்பேன்'', என்றார். ஒருக்கால் இரண்டு அல்லது மூன்று மணிநேரம். கிதியோன் ஆணத்துடனும், அப்பங்களுடனும், இறைச்சியுடனும் அங்கு வந்தான். அப்பொழுது தூதன், ''இதன் மூலம் நீ அறிந்து கொள்வாய். இது உனக்கு நிருபித்துக் காண்பிக்கும்'' என்றார். அவன் ஆணத்தை (Broth) பானபலியாக தரையில் ஊற்றினான். அவன் அப்பங்களையும் இறைச்சியையும் அவன் போரடித்துக் கொண்டிருந்த கற்பாறையின் மேல் வைத்தான். அப்பொழுது வயோதியனைப் போல் காணப்பட்ட அந்த தூதன் தமது கையிலிருந்த கோலினால் அவைகளைத் தொட்டார். அவர் தொட்டபோது, அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி செலுத்தப்பட்ட பலியை பட்சித்தது. அது என்ன? அவர் யாரென்பதை நிரூபிக்க அவனை வேதாகமத்துக்குக் கொண்டு சென்றார். 44அவர் கர்மேல் பர்வதத்தில் எலியாவுடன் இருந்த அதே தேவன். அவரைக் குறித்து இன்று காலை நான் பேசினேன். உங்கள் ஆத்துமாவை நீங்கள் நியாயாசனமாகிய அவருடைய வெண்கல பலிபீடத்தின் மேல் கிடத்தும் போது, என்ன நடக்கிறது? அவர் அதே தேவன். அவர் பலியை ஏற்றுக் கொள்வார். நீங்கள் உத்தமமாக அவருடைய பலிபீடத்தின் மேல் வைத்தீர்கள். அவர் அந்த பலியை பட்சித்து போடுவார். உலகம் உங்களை விட்டு அப்பொழுது போய்விட்டிருக்கும். அக்கினி விழுந்து பலியைப் பட்சிக்கும். ஆம். ''நீர் தேவனாயிருந்தால், நீர் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தேவன். நீர் அற்புதங்களைச் செய்ததாக எங்கள் பிதாக்கள் கூறியிருக்கின்றனர். நீர் அற்புதம் செய்வதை நான் காணட்டும். தேவன் என்னைச் சந்தித்தார் என்று நான் அறிந்து கொள்ள ஏதாவதொரு அற்புதத்தை நான் காணட்டும்.'' 45இதை நான் கூற விரும்புகிறேன். தேவன் இன்னமும் தேவனாயிருப்பாரானால், தேவன் முன் நாட்களில் இருந்த அதே தேவனாயிருப்பாரானால், நீங்கள் சென்று போதகருடன் கைகுலுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சென்று உங்கள் பெயரை ஒரு புத்தகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் பரவாயில்லை. அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டு ஒரு குறிப்பிட்ட சபையின் அங்கத்தினராகின்றீர்கள். அவர்களும் ஒரு சான்றிதழை உங்களுக்கு அளிக்கின்றனர். அதை நீங்கள் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள். ஆனால் அங்கு ஏதாகிலும் தவறு நேரிடும் பட்சத்தில், உங்களுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது. உடனே நீங்கள் வேறொரு சபைக்கு சென்றுவிடுகிறீர்கள். அங்கேயும் தவறு நேர்ந்தால், உடனே அந்த சபையையும் விட்டு மற்றொரு சபைக்கு சென்றுவிடுகிறீர்கள். அங்கேயும் தவறு நேர்ந்தால், உடனே அந்த சபையையும் விட்டு மற்றொரு சபைக்கு சென்றுவிடுகிறீர்கள். பாருங்கள், நீங்கள் முதலில் புரிந்த செயலே சரியல்ல. தேவன் இன்னமும் தேவனாயிருப்பாரானால், உங்கள் பாவமுள்ள ஆத்துமாவை அவருடைய பலிபீடத்தின் மேல் கிடத்துங்கள், அவர் அதை தமது வார்த்தையினாலும் வல்லமையினாலும் தொடுவார். அப்பொழுது உலகம் உங்களை விட்டுபோய்விடும், நீங்கள் புது சிருஷ்டியாகிவிடுவீர்கள், அவர் இன்னமும் தேவனாயிருப்பாரானால். 46அவர் பழைய ஏற்பாட்டின் தேவனாயிருந்தார். அவர் புதிய ஏற்பாட்டின் தேவனாயிருந்தார். இன்றைக்கும் அவர் அதே தேவனாயிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்பொழுது, இயற்கைக்கு மேம்பட்டவரால் இயற்கைக்கு மேம்பட்ட கிரியை நடந்தது என்பதை உங்கள் இருதயத்தின் ஆழத்தில் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் ஒரு காலத்தில் குடித்து, புகை பிடித்து, பொய் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். பெண்களாகிய நீங்கள் உலகத்தை அதிகமாக நேசித்து, அழகுபடுத்தும் பொருட்களை உபயோகித்து, உங்கள் தலைமயிரைக் கத்தரித்து, மற்றும் பல செயல்களைப் புரிந்தீர்கள். உங்களுக்கு ஏதோ சம்பவித்ததென்று நீங்கள் உணருகிறீர்கள். அப்பொழுது பாதாளத்திலுள்ள பிசாசுகள் அனைத்தும், நீங்கள் விட்டோய்ந்த பழைய செயல்களை உங்களை மறுபடியும் செய்ய வைக்க முடியாது. ஏதோ ஒன்று சம்பவித்தது, அற்புதங்களைச் செய்யும் தேவன் உங்களில் அற்புதத்தை நிகழ்த்தினார் அவர் என்ன செய்தார்? உங்கள் பொல்லாத இருதயத்தை மாற்றினார், உங்கள் விருப்பங்களை மாற்றினார், உங்கள் சுபாவத்தை மாற்றினார். இயற்கைக்கு மேம்பட்ட தேவனால் உரைக்கப்பட்ட இயற்கைக்கு மேம்பட்ட வார்த்தை காலவரையுள்ள ஒரு சிருஷ்டியை நித்தியத்துக்குரிய சிருஷ்டியாக மாற்றினது. ஆமென்! அவர் உங்களிலிருந்த உலகத்தை எடுத்துப் போட்டு, மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்துவை உங்களுக்குள் வைத்தார். நீங்கள் அவருடைய ஆவியினால் நிறைந்து, அவரை சந்திக்க ஆயத்தமாகின்றீர்கள். 47தேவன் தேவனாயிருப்பாரானால், அவருடைய அதிசயங்கள் எங்கே? தேவன் எங்களோடே இருந்தால், அவருடைய அற்புதங்கள் எங்கே? தேவன் மெதோடிஸ்டு சபையில் இருந்தால், பின்னை ஏன் அங்குள்ள பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கின்றனர்? தேவன் பாப்டிஸ்டு சபையில் இருந்தால், பின்னை ஏன் அந்த சபையின் போதகர்கள் பலர் புகை பிடிக்கின்றனர்? அவர்கள் ஏன் வியாதியஸ்தரை சுகப்படுத்துதல், மரித்தோரை உயிரோடெழுப்புதல், அந்நிய பாஷை பேசுதல். பாஷைக்கு அர்த்தம் உரைத்தல், தீர்க்கதரிசன வரங்கள் ஆகியவைகளுக்கு கிடைக்கப் பெறும் தேவனுடைய வல்லமையை மறுதலிக்கின்றனர்? பழைய ஏற்பாட்டின் தேவன், புதிய ஏற்பாட்டின் தேவன் இன்றைக்கும் மாறாத தேவனாயிருந்தால், அவர்கள் ஏன் இன்னமும் அதை மறுதலிக்க வேண்டும்? புதிய ஏற்பாட்டின் தேவன், பரிசுத்த ஆவி, பெந்தெகொஸ்தேயினர் உரிமை கோருகிறபடி இன்னமும் அதே தேவனாயிருந்தால், அவர்கள் ஏன் தங்கள் தடுப்பு சுவர்களை உடைத்தெறிந்து, ஒருவருக்கு விரோதமாய் மற்றவர் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டு, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகக் கூடாது? நிச்சயமாக, அவர்களில் ஒரு சாரார் மற்றொரு சாராருடன் பேசுவதும் கூட கிடையாது. பாருங்கள், பலியானது பட்சிக்கப்படவில்லை. அவர்கள் இன்னும் உணர்ச்சிகளில் நிலைத்திருக்கின்றனர். காலங்கள் தோறும் விக்கிரக வழிபாட்டினர் உணர்ச்சிகளில் சார்ந்திருந்தனர். 48வேதாகமத்தின் தேவன், அதாவது நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன், உலகத்தையும் எல்லா கருத்து வேற்றுமையும் பட்சித்துப் போட்டு, நம்மை கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக்குகிறார். ஆம், இயேசு, ''நான் யாரென்று என்னைக் குறித்து சாட்சி கொடுத்து உங்களுக்கு அறிவிக்கிறவைகளும் இவைகளே“ என்றார். விஷயம் என்னவென்றால், இவைகளை நாம் பெற்றுள்ள காரணம் என்னவெனில், நாம் இன்னும் ஸ்தாபன வேற்றுமைகள், கோட்பாடுகள், சண்டைகள், புகழ், உலகத்தின் பிசாசுகள், ஆகியவை தேவனுடைய உண்மையான சத்தியத்தை நாம் காணாதபடிக்கு நம்முடைய கண்களைக் குருடாக்க அனுமதித்துள்ளோம். அது உண்மை. 49பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக அநேகர் எண்ணம் கொண்டு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். நான் கூறினது போன்று, எலியாவின் அங்கிகள், வெளிப்படும் தேவனுடைய புத்திரர் போன்ற வெவ்வேறு உபதேசங்கள் இன்று உலகில் நிலவி வருகின்றன. ஜனங்கள் குருட்டுத்தனமாக இத்தகைய உபதேசங்களில் விழுந்து போய், கர்வம் கொண்ட ஆவியுடனும், மூர்க்க சுபாவத்துடனும் நிமிர்ந்து நிற்கின்றனர். அது தேவனுடைய ஆவியல்ல, அவர்கள் அதிலே தொடர்ச்சியாக ஒழுங்கற்றவர்களாக நிலை நிற்கின்றனர். அவர்களுக்கு சபை ஒழுங்கைக் குறித்து ஒன்றும் தெரியாது, தேவனுடைய வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாது. அவர்கள் நல்லொழுக்கம் எதுவுமின்றி, கர்வம் கொண்டவர்களாய், தேவனைக் குறித்து எவ்வித உணர்வுமின்றி உள்ளனர். அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் “என் சபை'' என்று மாத்திரமே. அவர்கள் ஸ்தாபன சபை ஆவியைப் பெற்றுள்ளனர். தேவனுடைய ஆவியைப் பெறவில்லையென்பதை அது காண்பிக்கிறது. ஏனெனில் நீங்கள் தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்தால், அது இவையனைத்தையும் உங்களை விட்டு அகற்றியிருக்கும், பட்சித்திருக்கும். நிச்சயமாக. பாருங்கள், அவர்கள், “அவர் எங்கே?” என்கின்றனர். அப்படி கேட்க நமக்கு உரிமையுண்டு. 50ஆனால், பாருங்கள், மேகங்கள் சூரியனை மறைத்திருந்தால், அது பிரகாசிக்கவில்லை என்றல்ல, அது எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது உங்கள் மேல் பிரகாசிக்காதபடிக்கு தடை செய்வது மேகங்களே. நீங்கள் அந்த மேகங்களை அகற்றிவிட்டால், சூரியன் உங்கள் மேல் பிரகாசிக்கும். ஆமென்! சகோதரனே, பாவத்தினின்றும், சந்தேகத்தினின்றும், குழப்பத்தினின்றும் விலகு, குமாரன் பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் போல இன்றைக்கும் மகத்தானவராயிருக்கிறார். ஆனால் நமது ஸ்தாபனங்களோ தேவனுடைய வார்த்தையை மறைத்து, ''அது வேறொரு நாளுக்குரியது. ஓ, தெய்வீக சுகமளித்தல் ஆயிர வருட அரசாட்சியின் போது இருக்கும்“ என்றோ அல்லது, ''அது முன்காலத்தில் நடந்த ஒன்று, அது இந்நாளுக்குரியதல்ல'' என்கின்றனர். 51அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருந்து, அதே சமயத்தில் எப்படி தெய்வீக சுகமளித்தல் போய் விட்டிருக்க முடியும்? எப்படி வல்லமை...? சுவிசேஷம் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேதாகமம் முன்பு அப்போஸ்தலர்கள், பின்பு தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர், மேய்ப்பர்கள் என்னும் ஒழுங்கை உறுதிபடுத்தியுள்ளது. அந்த சுவிசேஷம் இன்னும் ஜீவிக்கிறது மற்றும் தேவன் அவர்களை நமது மத்தியில் அனுப்பும் போது, நாம் அவர்களுக்கு புறமுதுகு காண்பிக்கிறோம். தேவன் தவறுவது கிடையாது. ஜனங்கள் தாம் தவறுகின்றனர். ''அப்படியானால் நமது மத்தியில் அற்புதங்கள் எங்கே? அவை எங்கே?'' தேவன் கிதியோனிடம் பேசி, அவன் புறப்பட்டு செல்வதற்கென அவனை ஆயத்தப்படுத்துகிறார். மேகங்களை அகற்றினால், சூரியன் எப்பொழுதும் பிரசாசித்துக் கொண்டிருக்கும். அது உண்மை. சந்தேகங்கள் அகன்று, காரியங்கள் நோக்கப்படும் போது, குமாரன் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அங்கு அற்புதங்கள் நிகழும். தேவனுடைய கட்டளையின்படி சூரியன் அனுதினமும் பிரகாசிக்கின்றது. அது அங்கிருக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்ட காரணத்தால், அது அங்குள்ளது. இரவு பகல் உள்ள வரையிலும், சூரியன் அங்கு தொங்கிக் கொண்டிருக்கும். நிச்சயமாக, நீங்கள் எல்லா நேரங்களிலும் அதை காண முடிகிறதில்லை, ஏனெனில் சில நேரங்களில் மேகங்கள் அதை மறைக்கின்றன. மூடுபனி, உயரமான மேகங்கள், தாழ்வான மேகங்கள் அதை மறைக்கின்றன. ஆனால் அது எப்பொழுதும் அங்குள்ளது, பாருங்கள். 52இன்று நீங்கள் தேவனுடைய அற்புதங்களைக் காண வேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் அகற்றுவதாகும். உங்கள் கோட்பாடுகள் அனைத்தையும் அகற்றுங்கள், உங்கள் ஸ்தாபனங்கள் அனைத்தையும் அகற்றுங்கள், அப்பொழுது குமாரன் அங்கு தாமாகவே பிரகாசிப்பார். அது தேவனுடைய கட்டளையாயுள்ளது. ஏனெனில் வேதாகமம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றுரைக்கிறது. அவர் எக்காலத்தும் இருக்க வேண்டும் என்றிருப்பதால், அவர் அங்கிருக்கிறார். அதைக் குறித்து எந்த கேள்வியும் கிடையாது, அவர் அங்கிருக்கிறார். அப்படியானால் அற்புதங்கள் எங்கே? அற்புதங்களைத் தடை செய்வது எது? தேவன் கிறிஸ்துவை அனுப்பினார், கிறிஸ்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். ''இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தில் எங்கே கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் இருப்பேன்.'' ஆமென்! “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' அதோ அவர் - அவருடைய வாக்குத்தத்தம்! 53அப்படியானால் என்ன நேர்ந்தது? நம்முடைய சந்தேகம், பேராசை, கோபம், சுயநலம், ஸ்தாபனங்கள் ஆகிய மேகங்கள் நம்மைப் பற்றிக் கொண்டு, நம்மை வார்த்தையிலிருந்து அகற்றி, கிறிஸ்துவையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானத்தையும் பரிசுத்த ஆவியையும் மற்றெல்லாவற்றையும் மறுதலிக்கும்படி செய்கின்றது. நமது கோட்பாடுகள் நம்மை வேதாகமத்திலிருந்து அகற்றிவிட்டன. 54சகோதரன் வே, இவையனைத்தின் மத்தியிலும், இந்த ஸ்தாபனங்கள் அனைத்தின் மத்தியிலும், குற்றம் கண்டு பிடிப்பவர் அனைவரின் மத்தியிலும் வேதாகமம் மாறாமல் நிலை நின்று அற்புதங்கள் நடக்கிறதென்பது வினோதமான காரியம் அல்லவா? இத்தனை புயலிலும் வேதாகமம் எவ்வாறு நிலை நின்றது? தேவன் ஒவ்வொரு மனிதனையும் வேதாகமத்தைக் கொண்டு நியாயந்தீர்ப்பதென்று தீர்மானித்துள்ளார். வேதாகமம் வார்த்தை, வார்த்தை கிறிஸ்து. ஒவ்வொருவரும், ஒவ்வொரு மனிதனும் அதைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுவான். மேகங்களை அகற்றி விடுங்கள். அப்பொழுது என்ன நடக்கிறது? சூரியன் அங்கேயே இருக்கிறது, இன்றைக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அதுவே. “ஓ, இயேசுவே, நீர் வந்து என்னை சுகப்படுத்தும்! ஓ, இயேசுவே, எனக்கு பரிசுத்த ஆவியைத்தாரும்!'' என்று சொல்லாதீர்கள். மேகத்தை அகற்றி விடுங்கள் - அவர் ஏற்கனவே அங்கு இருக்கிறார். அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தார், அவர் இப்பொழுதும் அங்கிருக்கிறார். அவர் எக்காலத்தும் அங்கிருப்பார். ''நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறேன்.'' அது உண்மை. 55கிதியோனும் அங்கிருந்த ஜனங்களும் தேவனுடைய அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு, ஒரு நிபந்தனை, நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தது. அதாவது, அற்புதங்களின் வல்லமையை அவர்கள் காண வேண்டுமென்றால், அவர்கள் விசுவாசிக்க வேண்டும். அவர்கள் தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதை விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள் அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு, தீர்க்கதரிசி கூறினதை அவர்கள் விசுவாசிக்க வேண்டியதாயிருந்த்து. அது போன்று நாமும் தேவனுடைய அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு, தீர்க்கதரிசிகள் கூறினதை நாம் விசுவாசிக்க வேண்டும். வேதாகமம் நமக்கு தீர்க்கதரிசியாக அமைந்துள்ளது. அது உண்மை! 56ஒரு மனிதன் எவ்வளவாக தன்னை பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினருக்கு தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொண்டாலும், அவன் என்னவாயிருந்தாலும், தன்னை என்னவிதமாக அழைத்துக் கொண்டாலும், இந்த வார்த்தை அவனுக்குள் ஜீவிக்காவிட்டால், அவன் தீர்க்கதரிசியல்ல. அவன் தீர்க்கதரிசியாயிருக்கலாம், ஆனால், கள்ளத் தீர்க்கதரிசி. உண்மையான தீர்க்கதரிசிகள் இந்த உண்மையான தேவனுடைய வார்த்தையை உரைத்து, தேவனை அதே தேவனாக, அதே வல்லமையுடனும், அதே வார்த்தையுடனும், அவரை உண்மையான வார்த்தையாக காண்பிக்கின்றனர். அவர்கள் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவனுடைய அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு தீர்க்கதரிசியின் வார்த்தையை விசுவாசித்து அதற்கு கீழ்ப்படிய வேண்டியதாயிருந்தது. இன்றைக்கு நீங்கள் “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பது உண்மையல்ல; அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன; பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கிடையாது,'' என்னும் தவறான கருத்துக்களை கொண்டு அதே சமயத்தில் தேவனுடைய அற்புதங்களைக் காணலாமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அதற்கு கீழ்ப்படிய வேண்டும்! நீங்கள் கீழ்ப்படியும் போது, மற்றவைகளை தேவன் கவனித்துக் கொள்வார். 57நீங்கள் எல்லா மேகங்களையும் பின்னால் தள்ளிவிட முடிந்தால், சூரியன் அங்கேயே உள்ளது. அது அங்கேயே தொங்கிக் கொண்டிருக்கிறது, சூரியன் அசைவதில்லை என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. அது அதே இடத்தில் இருக்கிறது. கிறிஸ்துவும் அங்கேயே இருக்கிறார் அது உண்மை. நாம் தான் அவரை விட்டு விலகிச் சென்றுவிடுகிறோம். ஆனால் அவரோ அங்கேயே இருக்கிறார். அது உண்மை, நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று என்னவெனில், நீங்கள் திரும்பி அவரை ஒரு முறை முகமுகமாய் சந்திக்க வேண்டும். அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். கிறிஸ்துவை முகமுகமாய் சந்தியுங்கள் சபையை முகமுகமாய் சந்திக்காதீர்கள், கோட்பாடுகளை முகமுகமாய் சந்திக்காதீர்கள், பட்டங்களை முகமுகமாய் சந்திக்காதீர்கள். கிறிஸ்துவை முகமுகமாய் சந்தியுங்கள் பாருங்கள். வேதாகமம் பள்ளிகளை முகமுகமாய் சந்திக்காதீர்கள், வார்த்தையை முகமுகமாய் சந்தியுங்கள்! கிறிஸ்துவே வார்த்தை. நிச்சயமாக, அப்படித்தான். அது முற்றிலும் உண்மை. 58வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தனர். நாமும் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதை நீங்கள் அறிய விரும்பினால், இங்கு ஒரு வேத வசனத்தைக் குறித்து வைத்திருக்கிறேன். “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வததெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்,” பாருங்கள்? அது என்ன? தேவனுடைய வார்த்தை நமக்குள் இருந்து, நமக்குள் நிலைத்திருக்குமானால், அது தானாகவே கிரியை செய்யும். ''நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.“ அது யோவான் 15:7ல் காணப்படுகிறது, நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், பாருங்கள், ”நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்'' என்று இயேசு கூறினார். இன்றைக்கு ஒன்று; நாளைக்கு வேறொன்று; இப்படியாக பின்வாங்கி, இங்கு, இங்கு, அங்கு என்று அலைந்து திரிவதல்ல, நீங்கள் துவக்கத்திலேயே எதையும் பெற்றிருக்கவில்லையென்பதை அது காண்பிக்கிறது. 59ஓ, நீங்கள், ''நான் அந்நிய பாஷைகள் பேசினேன்'' எனலாம். நல்லது, இருப்பினும் நீங்கள் எதையும் பெறவில்லை. பாருங்கள்? நீங்கள், “நான் ஆவியில் நடனமாடினேன்'' எனலாம். சரி, இருப்பினும் நீங்கள் எந்தவிதமான ஆவியைக் கொண்டு நடனமாடினீர்கள் என்று எனக்குத் தெரியாது, பாருங்கள்? நீங்கள் ஒரு நாள் ஒன்றிலிருந்து, அடுத்த நாள் வேறொன்றுக்கு மாறி; அடுத்தபடியாக ஒரு மரக்கொத்தி வந்து மரத்தில் ஒரு பொந்தை உண்டாக்கினால், அதற்கு பின் ஓடி, அடுத்த நாள் வேறொரு இடத்துக்கு மாறி, இப்படியாக சுவிசேஷ வேளையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தாவிக் கொண்டிருந்தால், நீங்கள் எதைச் சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியானால் கிறிஸ்து உங்களில் தங்கியிருக்கவில்லை, அவருடைய வார்த்தைகள் அங்கில்லை. ஏனெனில் அது நிலையான ஒன்று; நீங்கள் அந்தகாரத்துக்கு திரும்ப மாட்டீர்கள்! 60அன்றொரு நாள் நான் “நம்ப முடியாதது, ஆனால் உண்மை'' (Paradox) என்னும் பொருளின் பேரில் பேசின போது, யோசுவா சூரியனை நிறுத்தினதைக் குறிப்பிட்டேன். இப்பொழுது பின்னால் அமர்ந்திருக்கும் பெக்கி என்னிடம், ''அப்பா, யோசுவா சூரியனை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் உலகமே, நின்றுவிட்டிருக்கும். அவன் பூமியை நிறுத்தியிருப்பான்” என்றாள். நான், “அவன் சூரியனை நிறுத்தினான்” என்றேன். தேவன் தமது வேதாகமத்தில் தவறு எதுவும் செய்வதில்லை. அவள், ''அவன் எப்படி சூரியனை நிறுத்தியிருக்க முடியும்? சூரியன் சுழல்வதில்லையே. அது நிலையாக நிற்கிறது.“ என்றாள். நான், ''அங்கிருக்கும் சுடரை அவர் குறிப்பிடவில்லை. பிரயாணப்பட்டு பூமிக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் அந்த சூரியனையே அவன் நிறுத்தினான்“ என்றேன். அதை நிறைவேற்ற தேவன் என்ன செய்தாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சூரியனை நிறுத்தினார். சூரியன் இந்த வழியாக சென்று கொண்டிருந்தது. பூமியின் மேலுள்ள சூரியன், சூரிய வெளிச்சம், அங்கிருக்கும் சுடரை நம்மால் காணமுடியாது, அது கோடிக்கணக்கான மைல்கள் அப்பால் உள்ளது. ஆனால் பூமிக்கு குறுக்காக பயணப்பட்டு பகலையும் இரவையும் அளிக்கும் சூரிய வெளிச்சம், அதுதான் நிற்கும்படியாக யோசுவா கட்டளையிட்டான்; அது நின்றது, Paradox என்னும் ஆங்கிலச் சொல் நம்பத்தகாதது, ஆனால் உண்மை, என்னும் அர்த்தம் கொண்டது. எனவே அதை நம்ப முடியாவிட்டாலும், அது உண்மை. 61பாவியான, கர்வம் கொண்ட மூர்க்க சுபாவமுள்ள ஒரு மனிதனை பரிசுத்தவானாக எவ்வாறு தேவனால் மாற்ற முடிகிறது? தெருவில் நாய்களும் கூட ஏறெடுத்துப் பாராத அவ்வளவு நீசமான நிலையிலுள்ள ஒரு பெண்ணை பரிசுத்தவாட்டியாக எவ்வாறு தேவனால் மாற்ற முடிகிறது? எப்படியென்று என்னால் கூற இயலாது. ஆனால் அவர் அதை செய்தார். அது நம்பத்தகாதது, ஆனால் உண்மை. நிச்சயமாக. தேவனுடைய மகத்தான கிரியைகள் அனைத்துமே நம்பத் தகாதவைகளாக, ஆனால் உண்மையாக அமைந்துள்ளன. ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'' பரிசுத்த யோவான் 14... அல்லது பரிசுத்த யோவான் 15, மன்னிக்கவும். அது பரிசுத்த யோவான் 15:7. சரி. 62சிறிது நேரம் நாம் ஆதியாகமத்துக்குச் செல்வோம். நோவா அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியதாயிற்று. நோவா தேவனுடைய அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதன்படி செயல்பட வேண்டிதாயிற்று. அது உண்மை. ஆதியாகமத்தின் மகத்தான தீர்க்கதரிசியாகிய நோவா தேவனுடைய அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதன்படி செயல்பட வேண்டியதாயிற்று. அதுவரைக்கும் மழை பெய்ததே கிடையாது. உங்களுக்குத் தெரியும், மழை பெய்ததேயில்லை. நீங்கள் நினைப்பது என்ன? அவர்கள் என்ன சொல்லுகின்றனர் தெரியுமா? நோவாவின் காலம் நாம் வாழும் காலத்தைக் காட்டிலும் விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்த காலமென்று. நம்மால் கூர்நுனிக் கோபுரத்தையும் மற்ற சின்னங்களையும் கட்ட முடியவில்லை. சவங்களை தைலமிட்டுப் பாதுகாக்கும் சிறந்த முறைகளை நாம் அறிந்திருக்கவில்லை. நம்மால் நுற்றாண்டுகளாக மங்காமல் அப்படியேயிருக்கும் சாயங்களை துணிகளுக்குப் போட முடியவில்லை, இவைகளையெல்லாம் நாம் பெற்றிருக்கவில்லை. நமது நவீன விஞ்ஞானம் இவைகளைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனால் நோவாவின் காலத்தவர் இவைகளைப் பெற்றிருந்தனர். 63அவர்கள் காலத்திலிருந்த பொறியாளர்களை போல் நமக்கு இல்லை. சூரியன் எங்கிருந்தாலும் கூர்நுனிக் கோபுரத்தைச் சுற்றிலும் நிழல் விழாதபடிக்கு அது அவ்வளவு பிழையின்றி எகிப்தில் பூமியின் மையத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை எப்படி கட்டுவதென்று நமக்கு தெரியவில்லை. அந்த கூர்நுனிக் கோபுரத்தின் உச்சியில், ஏறக்குறைய நமது நகர 'பிளாக்'குகளின் பாதி உயரத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் எடையுள்ள கற்கள் வைக்கப்பட்டுள்ளன. நாம் வைத்துள்ள இயந்திரங்கள் அனைத்துமே அவைகளைத் தூக்கி அந்த இடத்தில் வைத்திருக்க முடியாது. ஸ்திரியின் முகமும் சிங்கத்தின் உடலும் இறக்கைகளும் கொண்ட சின்னத்தின் (Sphinx) கால்களைத் தூக்கி பொருந்த பதினாறு இயந்திரங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறினர். அவர்களால் எப்படி அதை அங்கு தூக்க முடிந்தது? அவர்கள் உண்மையில் சிறந்த விஞ்ஞானிகள். 64அத்தகைய காலத்தில் வாழ்ந்தவர்கள், மூட வைராக்கியம் கொண்ட ஒரு மனிதன், தீர்க்கதரிசியெனக் கருதப்படுபவன், “வானத்திலிருந்து தண்ணீர் விழப் போகின்றது'' என்று கூறுவதைக் கேட்டு என்ன சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் ''நாங்கள் எங்கள் இயந்திரங்களின் மூலம் நட்சத்திரங்களுக்கு ஏவுகணைகளை அனுப்பிப் பார்த்தோம். இங்கும் அங்குமிடையே ஒரு துளி தண்ணீர் கூட இல்லை'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால் நோவாவோ “மழை பெய்யப் போகின்றது என்று தேவன் என்னிடம் கூறினார்'' என்று பதிலுரைத்தான். அது போதும். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. அது நடக்குமென்று தேவன் கூறினார், அது நடந்தே தீரும். சரி (நான் வேகமாக முடிக்க வேண்டும். மற்ற சகோதரர்கள் பேசுவதற்காக காத்திருக்கின்றனர்.) நோவா, ''மழை பெய்யப் போகின்றது'' என்றான். ''உனக்கு எப்படி தெரியும்?“ “அது கர்த்தருடைய வார்த்தை. அது கர்த்தர் உரைக்கிறதாவது.” ''நோவாவே, நீ என்ன செய்யப் போகின்றாய்? சுற்றிலும் சென்று அதை பிரசங்கிக்கப் போகின்றாயா?'' ''இல்லை, ஐயா. அதற்காக நான் ஆயத்தப்படப் போகின்றேன்.'' பாருங்கள்? “ஓ, மழை பெய்யுமானால், அது ஒரு அற்புதமாக இருக்கும்! ஆனால் அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டனவே.'' ''சற்று பொறுங்கள், சிறிது கழிந்து நீங்கள் காண்பீர்கள்'' ஆம். ஐயா. அவன் என்ன செய்தான்? மழை பெய்யும் முன்பே அவன் பேழையைக் கட்டினான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? வாக்குத்தத்தத்தை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆமென். இப்பொழுது எனக்கு ஒருவிதமான பெந்தெகொஸ்தே உணர்வு உண்டாகின்றது. நான் பக்தி பரவசப்படுகிறேன். 65ஆம், தேவனுடைய வார்த்தையை ஏற்று கொண்டு, என்ன நிகழ்ந்த போதிலும் அவருடைய வாக்குத்தத்தத்தின் பேரில் செயல்படுங்கள். மற்றவைகளை செய்ய வேண்டியது தேவனுடைய பொறுப்பு. மேகங்களை அகற்றத் துவங்குங்கள். உங்களைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாரத்தை தள்ளிவிடுங்கள். உங்கள் சந்தேகங்களை, உங்கள் பயங்களை, உங்கள் ஸ்தாபனங்களை, உங்கள் கோட்பாடுகளை, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எதையும் தள்ளிவிடுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்கள் கோட்பாடுகளை தள்ளிவிடுங்கள். உங்கள் ஸ்தாபனங்களை தள்ளிவிடுங்கள். உங்கள் சந்தேகங்களை தள்ளிவிடுங்கள், உங்கள் பதட்டங்களை தள்ளிவிடுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் கடைசி தடைகளை நீங்கள் தள்ளிவிடும் போது, அவர் அங்கு நின்று கொண்டிருப்பார். நீங்கள் அவரை சந்திப்பீர்கள். 66''நான் பேழையைக் கட்டி முடித்த பின்பு, அவர் வருவார். மழை பெய்யத் துவங்கும்.'' என்று நோவா கூறினான். ''நீ பேழையைக் கட்டி முடிக்கும் நாளிலா?'' ''நான் ஐம்பது ஆண்டுகள் காக்க வேண்டியிருந்தாலும், பேழையினுள் உட்கார்ந்து கொண்டு அதற்காக காத்திருப்பேன். அது வரப்போகிறது, ஏனெனில் தேவன் அவ்வாறு கூறினார்!'' பாருங்கள், முதலாவதாக அவன் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டியதாயிற்று. தேவன் அற்புதங்களைச் செய்ய தேவன் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் அவரை சந்தேகிக்கவில்லை. தேவன் அவனுடன் பேசியிருந்தார். அவன் அதை அறிந்திருந்தான். தேவன் தம்முடைய வார்த்தையிலிருந்து உங்கள் இருதயத்தில் பேசும்போது, நீங்கள் அதை அறிவீர்கள், உலகம் அனைத்தும் உங்களை விட்டு எடுபட்டு, உலகக் காரியங்கள் மரித்தவைகளாக இருக்கும்போது, நீங்கள் அதை அறிவீர்கள். நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், நீங்கள் சரியல்ல என்று அப்பொழுது உங்கள் இருதயத்தில் அறிவீர்கள். அது உண்மை. எல்லாம் போன பின்பு, தேவனைச் சந்திப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது. அவர் அங்கு நின்று கொண்டிருப்பார். அவர் அங்கிருக்கிறார். 67சூரியனைப் போல குமாரனும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். இன்று பிரகாசித்துக் கொண்டிருக்கிற அதே சூரியன் தான் ஆதியாகமத்தின் காலத்திலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பர்வதத்தின் மேல் எலியாவின் மேலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதே சூரியன் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது ஒளி கொடாமல் மறைந்தது. அல்லேலூயா? அது மாறாததாக இருக்கிறது. தேவனுடைய குமாரனும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் - வல்லமையிலும், அன்பிலும், அடையாளங்களிலும் மாறாதவர். இன்றைக்கு ஒரு கிறிஸ்தவனின் அடையாளம் என்ன? ''ஓ, அவன் சபைக்குச் செல்கிறான். தன் பெயரைப் புத்தகத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறான். ஒரு சான்றிதழைப் பெற்றிருக்கிறான்.'' அதுவல்ல இயேசு கூறின அடையாளம். அவர், ''விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும் அடையாளங்களாவன. என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார் (மாற்கு 16:17-18). தேவன் எங்களோடே இருந்தால், அவருடைய அடையாளங்கள் எங்கே? அவருடைய வார்த்தைக்குத் திரும்புவதற்கு நிச்சயமுடையவர்களாயிருங்கள். நாம் வார்த்தைக்குத் திரும்பும் போது, அடையாளங்கள் தாமாகவே உண்டாகும். 68நோவா தேவனுடைய அற்புதங்களை காண்பதற்கு முன்பு, கேள்வி கேட்ட கிதியோனைப் போல், முதலில் தேவனுடைய வார்த்தையின் பேரில் செயல்பட வேண்டியதாயிருந்தது. எல்லோருமே தேவனுடைய வார்த்தையின் பேரில் செயல்பட வேண்டும். தேவன் இருக்கிறார் என்று நான் கூறுவதற்கு முன்பே, நான் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் செயல்பட வேண்டியதாயிற்று, அப்பொழுது தேவன் தம்மை வெளிப்படுத்தினார். உங்களுக்கு சுகம் தேவையானால், அவரை விசுவாசியுங்கள்! அவருடைய வார்த்தையின் பேரில் செயல்படுங்கள் - அப்பொழுது அது நிறைவேறும். மோசே தேவனுடைய அற்புதங்களைக் காண்பதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தையின் பேரில் முதலாவதாக செயல்பட வேண்டியதாயிற்று. அவன் பிறப்பு வினோதமானது என்று அவன் தாய் கூறுவதைக் கேட்டிருக்கிறான். அவன் நாணலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டான். தேவன் அவனை அழைத்து, அவனைத் தெரிந்து கொண்டாரென்று அவனுடைய தாய் அவனிடம் கூறியிருக்கிறாள். அவன், ''நல்லது, நான் சிறந்த இராணுவ வீரனாயிருப்பதால், நான் சென்று அந்த எகிப்தியனைக் கொன்று மண்ணில் புதைத்துவிடுவேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவ்வளவுதான்'' என்று எண்ணினான். அவன் அதைத்தான் செய்ய முயன்றான். அதுவே அவன் அபிப்பிராயம், அந்த சமயத்தில் அவனைக் காக்க தேவன் அற்புதங்கள் செய்ததாக அவன் காணவில்லை. ஆனால் ஒரு நாள் அவனுக்கு எண்பது வயதான பிறகு அவன் புல்லுள்ள இடங்களில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒருக்கால் ஆடுகள் அந்த பாதைக்கு ஓடிச் சென்றிருக்கும். வயது சென்ற ஒரு ஆடு மேய்ப்பன், கையில் கோணலான ஒரு தடியை பிடித்துக்கொண்டு, பாதையின் பக்கத்தில் அதை தட்டிக்கொண்டே சென்றிருப்பான். எண்பது வயதான காரணத்தால் அவன் நொண்டி நடந்திருப்பான். அவனுடைய தாடி இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருந்தது? அது அவன் மேய்த்த ஆட்டின் ரோமத்தைப் போல் நரைத்திருக்கும். அவன் ஒன்றைக் கண்டான்! ஓ தேவனே! அது அவனுக்கு பிரமிப்பாயிருந்தது. 69இன்றிரவு உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க முடியமென்று நம்புகிறேன். இங்கு தண்ணீர் குளத்தை நாங்கள் ஆயத்தமாக வைத்திருக்கிறாம். அவன் இதற்கு முன்பு காணாத ஒன்றைக் கண்டான். ''அது என்னவென்று பார்க்கப் போகிறேன்'' என்று கூறி அவன் திரும்பின போது, கர்த்தருடைய வார்த்தை அவனுக்குண்டானது. மகிமை! அல்லேலூயா! கர்த்தருடைய வார்த்தை அவனுக்குண்டானது. அவன் போவதற்கு முன்பு, கர்த்தருடைய வார்த்தையின் பேரில் செயல்பட வேண்டியதாயிற்று. கர்த்தருடைய வார்த்தை எப்பொழுதும் அற்புதங்களைச் செய்கிறது. அவன், ''நீர் என்னோடிருக்கிறீர் என்றும் என்னை அனுப்பினர் என்றும் எதனால் அறிவேன்'' என்றான். அவர், “உன் கையிலிருக்கிறது என்ன?'' என்றார். அவன், “உலர்ந்த ஒரு கோல்'' என்றான். “அதை தரையிலே போடு!'' மோசேக்கு தேவன் கொடுத்த முதல் கட்டளை என்னவெனில், ''நான் தேவனென்று நீ அறிய வேண்டுமானால், உன் கையிலிருக்கிற கோலைத் தரையிலே போடு'' என்றார். கிதியோன், “தேவனுடைய அற்புதங்கள் எங்கே?'' என்றான். அவர், ''உன் அப்பத்தை பலிபீடத்தின் மேல் வை. தேவன் யாரென்று உனக்குக் காண்பிக்கிறேன்'' என்று சொல்லி தமது கோலால் அதை தொட்டார். அப்பொழுது புகை மேலே எழும்பினது, அக்கினி அதை பட்சித்தது. 70மோசே, ''உன்னை அனுப்பினது யாரென்று கேட்டால் நான் என்ன சொல்வது? நீர் தேவன் என்று நான் எப்படி அறிவேன்?'' என்றான். அவர், ''உன் கையில் என்ன இருக்கிறது? நானே ஜீவனை சிருஷ்டித்தவர். நான் அற்புதங்களைச் செய்யும் தேவன்“ என்றார். அற்புதங்களைச் செய்யும் தேவனுடைய வல்லமையை மோசே காண்பதற்கு முன்பாக, அவன் முதலாவதாக தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அவன் கோலைத் தரையிலே போட்டான். அது பாம்பாக மாறினது. வ்யூ! ஓ, என்னே என்ன? நீங்கள் அவருடைய அற்புதங்களைக் காணும் முன்பு, முதலில் கீழ்ப்படிதல் அவசியம்! 71தேசங்களிலுள்ள சபைகள் என்னப்படுபவை, ''அற்புதங்கள் எல்லாம் எங்கே? யாராகிலும் அற்புதம் செய்தால், அவருக்கு நாங்கள் ஆயிரம் டாலர்கள் தருகிறோம்'' என்கின்றனர். பாவம், பின்வாங்கிப் போன, இரண்டு தரஞ் செத்து வேரற்றுப் போன மரமே... நீயே மறுபிறப்பு என்னும் அற்புதமாகும் வரைக்கும் எப்படி, ஒரு அதிசயத்தைக் காணப்போகின்றாய்? மகிமை! சந்தேகப்படும் ஒருவனை எடுத்து அவனைப் பரிசுத்த ஆவியால் நிறைப்பது தேவனுடைய கிருபையாகிய அற்புதம் அல்லவா? ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்“ என்று இயேசு கூறினார். நீ அற்புதத்தைக் காண வேண்டுமென்றால், நீயே அற்புதமாகு. தேவன் உன்னில் முதலில் கிரியை செய்யட்டும். அவர் உன்னை முழுவதும் பழுது பார்த்து, உன் கண்களுக்கு வெவ்வேறு கண்ணாடிகளை அணிய வேண்டும். ஏனெனில் நீ குருடனாய், ஆவிக்குரிய பிரகாரம் குருடனாய், பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்தவனாய் இருக்கிறாய். உண்மை! தேவன் உனக்கு ஜீவனைக் கொடுத்து, நீ பார்வையடைய உன் கண்களைத் தொட வேண்டும், அவர் உன்னில் அற்புதத்தை செய்து, உன்னையே ஒரு அற்புதமாக்க வேண்டும் - அப்பொழுது நீ அற்புதங்களைச் செய்யும் தேவனைக் காண்பாய். அதுதான் முதலாவதாக நடக்க வேண்டியது 72மோசே அவரை விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது, தேவனுடைய வார்த்தை கூறினபடி அவன் செயல்பட வேண்டியதாயிருந்தது. தேவன் இருக்கிறாரா இல்லையா என்று அவன் காண விரும்பினான். அவர், “நல்லது, மோசே, நான் உனக்கு என்ன கூறுகிறேனோ, அதன்படி செயல்படு'' என்றார். சகோதரனே, சகோதரியே, இன்றிரவு இதற்கு செவிகொடு, தேவன் யாரென்று நீ அறிய விரும்பினால், அவர் இங்கு என்ன கூறியுள்ளாரோ அதன்படி செயல்படு. ''நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களே அற்புதமாகிவிடுவீர்கள். அது அவருடைய வாக்குத்தத்தம். அப்படித்தான் அவர் கூறியுள்ளார். அவருடைய வார்த்தையின்படி செயல்படுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உண்டாயிருக்கிறது.'' “ஓ, அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமா?'' “நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” அவர்களுக்கும் கூட அந்த வாக்குத்தத்தம். 73அவருடைய வார்த்தையின்படி செயல்படுங்கள் அப்பொழுது நீங்கள் உண்மையான அற்புதத்தைக் காண்பீர்கள். நீங்கள் வார்த்தையின்படி செயல்படும்போது, ஏதாவதொன்று நிச்சயம் நடக்கும். கிதியோன் செய்தது போல் - தேவன் என்ன செய்யக் கூறினாரோ, அதை, அவன் செய்தான். நோவா செய்தது போல் - தேவன் என்ன செய்யக் கூறினாரோ, அதை அவன் செய்தான். மோசே செய்தது போல் - தேவன் என்ன செய்யக் கூறினாரோ, அதை அவன் செய்தான்! அவர் மோசேயிடம், ''உன் கோலைத் தரையில் போடு“ என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், ''உன்னை சுற்றிலும் இருக்கிற எல்லாவற்றையும் அகற்றிவிடு” ஆமென். “அதை என்னிடம் கொடுத்து விடு.'' ''எனக்கு பயங்கரமான கோபம் வருகிறது'' என்கிறாயா? அதை தேவனிடம் கொடுத்து விடு. அதை எப்படி தணியச் செய்ய வேண்டுமென்று அவர் அறிவார். “எனக்கு அதிகமான இச்சை உள்ளது.” அதை எடுத்துப் போட அவருக்குத் தெரியும், பாருங்கள்? அதை அவருடைய கரங்களில் சமர்ப்பித்து, அவர் எப்படிப்பட்ட அற்புதத்தை செய்கிறாரென்று பாருங்கள். அது உண்மை. சரி. 74மோசே தேவனுடைய அற்புதங்களைக் காணும் முன்பு... தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அதன்படி செயல்பட வேண்டியிருந்தது. ஆனால் சகோதரனே, அவன் அதை ஒரு முறை கண்ட பின்பு, அவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அடுத்த நாள் அவன் சிப்போராளைக் கழுதையின் மேலேற்றினான். சிறு கெர்சோம் (Gershom) அவனுடைய இடுப்பில், இல்லை, அவளுடைய இடுப்பில். அவனுடைய தாடி இப்படி தொங்கிக் கொண்டிருந்தது. சகோதரனே, அவனுடைய முகத்தில் சிரிப்பு, அவனுடைய கண்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் நடனமாடிக் கொண்டிருந்தன. ஆடு மேய்ப்பவனிலிருந்து தேவனுடைய வல்லமையான மனிதனாக மாறுதல் - ஜனங்களை விடுவிக்கச் செல்லும் பராக்கிரமசாலி. கிதியோனைப் பாருங்கள்! என்ன நடந்தது? ஆம், ஐயா, கோணலான கோலுடன் ஒரு தேசத்தையே வெல்ல புறப்படுகிறான். நிச்சயமாக அவன் செய்தான். தேவன் அப்படி செய்யக் கூறினார். அது எவ்வளவு தான் முடியாதது போன்று தென்பட்டாலும் கவலையில்லை. தேவன் உங்களை என்னச் செய்யக் கூறுகிறாரோ, அதை செய்யுங்கள். அவருடைய வார்த்தை இன்னமும் மாறாததாயுள்ளது என்பதை கண்டு கொள்வீர்கள். மேகங்களை அகற்றி விடுங்கள், குமாரன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். 75யோசுவா, ஓ, அந்த மகத்தான வீரன் ஓ, மோசேக்கு அடுத்தபடியாக நியமிக்கப்பட்டவன், தேவன் அன்பு கூர்ந்த மகத்தான வீரன், தேவன் அன்பு கூர்ந்த மனிதன்! தேவன் அவனிடம், ''நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன்'' என்றார். ஆனால் தேவனுடைய வல்லமை தாக்கி எரிகோவின் மதில் சுவர்கள் விழுவதற்கு முன்பு, யோசுவா சேனையின் அதிபதியின் உத்தரவின்படி பதின்மூன்று முறை அதை சுற்றி வர வேண்டியதாயிற்று. சேனையின் அதிபதி அவனைச் சந்தித்தபோது அவனிடம் கூறின தேவனுடைய வார்த்தையின்படி அவன் மதில் சுவர்களைச் சுற்றி வந்து எக்காளம் ஊதினான். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவன் மதில்களை சுற்றி வந்தான். அவன் என்ன செய்தான்? அவன் அற்புதத்தைக் காணும் முன்பு, தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்டான். 76எக்காளம் ஊதினால், இரதப் பந்தயம் நடத்தும் அளவுக்கு பலமான மதில் சுவர்களை, அசைத்து இடிந்து விழச் செய்ய முடியாது என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் தேவன், ''அந்த மதில்களை ஏழு முறை சுற்றி வாருங்கள், கடைசி நாளில் ஏழு முறை சுற்றுங்கள்'' என்றார். ஒட்டு மொத்தமாக பதின்மூன்று முறை. அவர், ''கடைசி முறையாக நீங்கள் சுற்றி வரும் போது, ஆசாரியர்கள் உடன்படிக்கை பெட்டியைச் சுமந்து கொண்டு முன்னால் சென்று, எக்காளம் ஊத வேண்டும். எக்காளம் ஊதும் போது, சுவர்கள் இடித்து விழும் என்றார்!“ அவர்கள் என்ன செய்தனர்? அவன் தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்ட பின்பு, தேவனுடைய அற்புதத்தைக் கண்டான். உங்கள் அற்புதங்கள் எங்கே? முதலில் அவருடைய வார்த்தையின்படி செயல்படுங்கள். மதில் சுவர்கள் இடிந்து விழுந்தபோது, அந்த ஒரு சிறு வீடு - வேசியின் வீடு - மாத்திரம் எப்படி விழாமல் நின்றிருக்க முடியும்? ஏனெனில் அவள் தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்டாள். மற்றவர்கள் மரித்தபோது, அவள் மாத்திரம் எப்படி உயிர் வாழ்ந்தாள்? அவள் தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்ட காரணத்தால், தேவனுடைய அற்புதத்தைக் காணமுடியும் - தேவனுடைய வார்த்தையின்படி செயல்படுவதன் மூலம். 77எரிகிற அக்கினிச் சூளையில் எபிரேய பிள்ளைகள். அவர்கள் தேவனுடைய அற்புதத்தைக் காணும் முன்பு என்ன செய்தனர்? தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்டார்கள். அவர் தேவனென்று அவர்கள் அறிந்திருந்தனர். எகிப்திலிருந்த அவர்களை வெளியே கொண்டு வந்த தேவன் அவரே என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர் என்றென்றும் மாறாத தேவனென்றும் அவர் அற்புதங்களைச் செய்ய வல்ல தேவனென்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் விக்கிரகங்களைப் பணிந்து கொள்ளக்கூடாது என்னும் கட்டளையை தேவன் அவர்களுக்கு அளித்திருந்தார். அவர் மாறுவதில்லை. ''என் வார்த்தையில் நிலை நிற்பாயாக! விக்கிரகங்களைப் பணிந்து கொள்ளாதே!'' அவர்கள் என்ன சொன்னார்கள். ''நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களை எரிகிற அக்கினிச் சூளைக்கு நீங்கலாக்கி விடுவிக்க வல்லவராயிருக்கிறார். விடுவிக்காமற் போனாலும், நாங்கள் அவருடைய வார்த்தையின்படி நடப்போம்!“ பார்த்தீர்களா? என்ன நடந்தது? அப்பொழுது அவர்கள் தேவனுடைய அற்புதத்தைக் கண்டனர், அவர் அக்கினியின் உக்கிரத்தை அவித்துப்போடும் தேவன் என்று. 78நீங்கள் வியாதியாயிருக்கிறீர்களா? அவருடைய வார்த்தையின்படி நடந்து கொண்டு, அவர் சுகமளிக்கிறாரா என்று பாருங்கள். நீங்கள் பாவியாயிருந்து, பரிசுத்த ஆவியால் நிறையப்பட விரும்பினால், நீங்கள் வந்து, மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையின்படி நடந்துகொண்டு, பின்பு என்ன நடக்கிறதென்று பாருங்கள். உலகம் உங்களுக்குள் இன்னும் இருக்குமானால் - பெண்களாகிய நீங்கள் குட்டை தலை மயிரை வைத்துக்கொண்டு, அழகுபடுத்தும் பொருட்களை உபயோகித்து வருவீர்களானால், ஆண்களாகிய நீங்கள் கோபத்தன்மை கொண்டு, இன்னும் உங்கள் ஸ்தாபனங்களைக் - குறித்து வீண் சந்தடி செய்து கொண்டிருப்பீர்களானால், அவர் இன்னமும் தேவனாயிருக்கிறாரா என்று நீங்கள் கண்டறிய விரும்பினால், அவருடைய வார்த்தையின்படி நடந்து அவருடைய பலிபீடத்தின் மேல் உங்களை கிடத்தி, என்ன நடக்கிறதென்று பாருங்கள். அவர் தேவனாயிருக்கிறார். நீங்கள் முதலில் அவருடைய வார்த்தையின்படி நடந்து கொள்ள வேண்டும். 79தானியேல், அவனை சிங்கங்களின் கெபியிலிருந்து விடுவித்த தேவனுடைய அற்புதத்தைக் காண்பதற்கு முன்பு அவன் முதலாவதாக செய்தது, தேவனுடைய வார்த்தையின்படி நடந்து கொண்டதே. ''இந்த சொரூபத்தை தவிர வேறு எந்த தேவனையும் ஒருவன் இத்தனை நாட்கள் பணிந்து கொள்வானானால், அவன் சிங்கங்களின் கெபியில் போடப்படுவான்“ என்று பிரகடனம் செய்யப்பட்டது. ராஜாவைத் தவிர வேறெந்த தேவனுக்கு ஒருவனும் ஜெபத்தை ஏறெடுக்கக் கூடாது. பாருங்கள், ராஜா முப்பது நாட்களுக்கு தேவனாயிருக்க வேண்டும். ஆனால் தானியேல் என்ன செய்தான்? தேவனுடைய வார்த்தையின்படி நடந்து கொண்டான். சாலொமோன் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த போது அவன், ''கர்த்தாவே, உமது ஜனங்கள் எங்காகிலும் கஷ்டத்தில் இருந்து, இந்த பரிசுத்த ஆலயத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணினால், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு உத்தரவு அருளுவீராக,'' என்று ஜெபம் பண்ணினான். அது உண்மை. 80தானியேல் முதலில் செயல்பட்டான். அச்சுறுத்தல் என்னவென்றால், ''நீ சிங்கங்களின் கெபியில் போடப்படுவாய்'' என்பதே. ஆனால் தானியேல் தேவனுடைய வார்த்தையின்படி நடந்தான். தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். கிதியோன் செய்தது போல்; தேவன் இன்னமும் தேவனாயிருந்தால், அவருடைய அற்புதங்கள் எங்கே? அவர் அற்புதங்கள் செய்யவேண்டும் என்று அவனுக்குத் தெரியும். தானியேல், தான் தீர்க்கதரிசி என்பதை அறிந்திருந்தான், அவன் தேவனிடத்தில் அன்பு கூர்ந்தான். அவன் அவருடைய ஊழியக்காரன் என்றும், அவனை அவர் சிங்கங்களினிடமிருந்து தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்றும் அறிந்திருந்தான். ஆனால் அவன் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டு பயமுறுத்தப்பட்டபோது, அவன் தன் முகத்தை தேவாலயத்துக்கு நேராக திருப்பி தினந்தோறும் மூன்று தரம் ஜெபம் செய்தான். அவன் தேவனுடைய வார்த்தையின்படி நடந்துகொண்ட காரணத்தால் தேவன் அவனை முழுவதுமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். சிங்கங்கள் அவனைத் தின்ன முடியவில்லை. அது உண்மை. அது உண்மை. அவன் முதலில் தேவனுடைய வார்த்தையின்படி நடந்தான். 81மீனின் வயிற்றிலிருந்த யோனா முதலாவதாக தேவனுடைய வார்த்தையின்படி நடந்தான். அவனுக்கு சரீர முடிவு அருகாமையிலிருந்ததை அவன் உணர்ந்தான். அவனுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. புறஜாதிகளுக்கு பிரசங்கியாக அனுப்பப்பட்டவன் கப்பலிலிருந்து வெளியே எறியப்பட்டு, மீனின் வயிற்றுக்குள் சென்று, கடலின் ஆழத்தை அடைந்தான். அவனுடைய நிலைமை எப்படியிருந்தது! அவன் மீனின் வயிற்றினுள் உருண்டு புரண்டான். கடற்பூண்டு அவனுடைய கழுத்தை சுற்றிக் கொண்டது. இந்த கடற்பூண்டுகளை அந்த மீன் தனக்குப் போதிய விட்டமின்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விழுங்கி வந்தது, பிறகு ஒரு பிரசங்கியையும் அது விழுங்கி தன் வயிற்றினுள் கொண்டிருந்தது. இந்த பிரசங்கிக்கு சுயநினைவு அப்பொழுது வந்தது. அல்லேலுயா! ஓ, சகோதரனே, பிரசங்கியே, இன்றிரவு உன் சுயநினைவுக்கு வா! அந்த கோட்பாடுகள் அனைத்தும் அகற்றிவிட்டு, ஜீவனுள்ள தேவனிடம், ஜீவிக்கிற வார்த்தையிடம் திரும்பு. 82அவன் சுயநினைவை அடைந்த போது, அவன் மீனின் வயிற்றினுள் உருண்டான். ஒரு பரிசுத்தவான் ஜெபம் செய்யாதபடிக்கு நீங்கள் தடுக்க முடியாது. அவன் உருண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது, எல்லா திக்குகளிலும் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. அவனை மீனின் வயிறு மாத்திரமே சூழ்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவன் கடலின் ஆழத்தில் மீனின் வயிற்றில் இருப்பதை உணர்ந்தான். கடலில் புயல் அடித்துக் கொண்டிருந்தது. அவன் கப்பலில் இருந்த போதே நம்பிக்கை இழந்தவனாய் இருந்தான். இப்பொழுது மீனின் வயிற்றில், முன்னைக் காட்டிலும் அதிகமாக நம்பிக்கை இழந்தவனாய் அவன் காணப்பட்டான். அவன் மீனின் வயிற்றை மாத்திரம் கண்டபோது, அவன், “இவை பொய்யான மாயை. இவைகளை நான் இனி நம்ப மாட்டேன். உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன்” என்றான்.“ பரிசுத்த ஆலயம் - கீழே இல்லை. ”அது மேலே இருந்தது. அதை நான் மேலே நோக்குவேன்“ என்றான். 83அப்பொழுது அவன் தேவனுடைய அற்புதத்தைக் கண்டான். எப்படியோ பிராணவாயு மீனுக்குள் வந்தது. அவன் மூன்று நாட்கள் எப்பொழுதும் போல பிராணவாயுவை சுவாசித்தான். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அந்த பொல்லாங்கு நிறைந்த பட்டினத்தில் நாற்பது நாட்கள் பயணத்தை மேற்கொள்வதற்கென அவன் மீனின் வயிற்றினுள் சிறிது இளைப்பாறி, அதனுள் இருந்து கொண்டு சவாரி செய்து கொண்டிருந்தான். அவன் பரலோகத்திலிருந்து வந்த பிராண வாயுவினால் புத்துணர்ச்சி பெற்றான். அது மீனிலிருந்து கிடைத்திருக்க முடியாது. அது கடலிலிருந்தும் அவனுக்கு கிடைத்திருக்க முடியாது. அது தேவனிடத்திலிருந்து வந்திருக்க வேண்டும்! கர்த்தாவே, இன்றிரவு எங்கள் மேல் தேவனுடைய வார்த்தை என்னும் பிராண வாயுவை அவருடைய உயிர்த்தெழுதலின், வல்லமையுடன் ஊதி, இந்த பொல்லாங்கான கடைசி நாட்களில் நாங்கள் உயிர் வாழும்படி செய்யும். ஓ, பரிசுத்த ஆவியே, எங்கள் மேல் ஊதுவீராக! அது தான், சகோதரனே, கர்த்தாவே, எங்கள் மேல் ஊதி, எங்களை பிராண வாயுவினால் நிரப்புவீராக! 84இன்று காலை நான் உங்களிடம் வார்த்தைக் குறித்து கூறினது போன்று, வாத்து தண்ணீரை முகர்ந்த மாத்திரத்தில், அதை எதுவுமே தடை செய்ய முடியவில்லை. கோழியின் கொக்கரிப்பும் மற்ற எதுவும், அது நேரடியாக தண்ணீருக்குள் சென்றது. ஏனெனில் அது ஒரு வாத்து. உங்களுக்கு யாருக்காகிலும் வாத்தின் சுபாவம் இருக்குமானால், இங்கு எங்களிடம் ஒரு பெரிய குளம் உள்ளது, பாருங்கள். உங்களால் முகரக் கூடுமானால், தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறாரென்று நீங்கள் முகர்ந்து உணர முடிந்தால், தேவன் தம்முடைய வார்த்தையைக் காக்கிறாரென்றும், அவர் அற்புதங்களைச் செய்யும் தேவனென்றும் நீங்கள் பரலோகத்திலிருந்து முகர்தலைப் பெற முடிந்தால், நீங்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையென்றால், தண்ணீரை முகருங்கள். அதை தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். நிச்சயமாக உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து மனந்திரும்பி, உங்களைப் பலியாக பலிபீடத்தின் மேல் கிடத்துங்கள். அப்பொழுது நீங்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து பட்சிக்கப்பட்டு, ஆவியினால் மறுபடியும் பிறப்பீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் ஞானஸ்நானம் பெறுங்கள். அவர் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். நீங்கள் சரியான முறையை பின்பற்றுங்கள். போதகரிடம் கை குலுக்கி, உங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்வதன் மூலம் உள்ளே வருவதல்ல, உலகத்தை நீங்கள் இனிமேல் அறியாத அளவுக்கு மரித்துவிடுங்கள். 85ஆபேல் ஆட்டுக்குட்டியோடு அதே பலிபீடத்தின் மேல் மரித்தான். நீங்கள் தேவனிடத்தில் நேராகக் கூடிய ஒரே வழி, கிறிஸ்துவுடன் கூட பலிபீடத்தின் மேல் மரிப்பதன் மூலமே. உங்களைச் சுற்றியுள்ள எல்லாமே இருளடைய வேண்டும். அங்கு மரியுங்கள், நீங்கள் மறுபடியும் எழும்பும் போது, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாயிருப்பீர்கள். நிச்சயமாக. யோனா தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதன்படி முதலில் நடக்க வேண்டியதாயிருந்தது. அவன் மீனின் வயிற்றினுள் கடலின் ஆழத்தில் சென்ற போது, முகங்குப்புற சென்றிருப்பான். ஏனெனில் அவர்கள் அவனை தூக்கி எறிந்தனர். அவன் நேராக மீனின் வயிற்றினுள் சென்றான். ''நல்லது, நாம் கடலின் ஆழத்துக்கு செல்வோம்'' என்று மீன் கூறினது. அந்த மூன்று நாட்களாக மீன் என்ன நினைத்ததோ தெரியவில்லை. அதற்கு வினோதமான உணர்ச்சி ஏற்பட்டது. இப்பொழுது, பாருங்கள், மீனின் அமைப்புக்கு அது பிடிக்காது. அது போன்று ஸ்தாபன சபைகளுக்கும் அது பிடிக்காது. ஆனால் யோனாவுக்கு அது எவ்வளவு விருப்பமாயிருந்தது! நிச்சயமாக, அதை விரும்பினான். ஏனெனில் தேவன் புதிய காற்றை அவன் மேல் வீசிக் கொண்டிருந்தார். இவன் உயிரோடு இருந்தான். தேவனே, புதிய காற்றை எங்கள் மேல் வீசும்! 86யோனா தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து இயற்கையான ஒரு ஆலயத்தை நோக்கியதன் மூலம் அற்புதம் நிகழுமானால்... அந்த ஆலயத்தைக் கட்டினது முடிவில் பின்வாங்கிப் போன (சாலொமோன்) அவன், அந்த ஆலயத்தை நோக்கி ஜெபித்தவர் எங்கிருந்தாலும், தேவன் அவர்களைக் கஷ்டத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஜெபித்தான். யோனா அவனிருந்த நிலையில் அதை விசுவாசித்தான். அப்படியிருக்க, இன்றிரவு நாம் எவ்வளவு அதிகமாக பரலோகத்தை நோக்கி விசுவாசிக்க முடியும்? அங்கு சாலொமோனைப் போல் பின்வாங்கிப் போன ஒருவரோ, மரித்து கல்லறையில் தங்கியுள்ள (ஒருவரோ இல்லை... சாலொமோன் அந்நாளில் இருந்தது போல்), ஆனால் ஜீவிக்கிற தேவன் எல்லா வல்லமையும் அதிகாரமும் கொண்டவராய், மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து கொண்டு, அன்று செய்தது போல் வசனத்தைப் பிரசங்கிக்க பரிசுத்த ஆவியை அனுப்புகிறவராய் அங்கிருக்கிறார். ஆமென். தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் தேவனுடைய அற்புதங்களைக் காண்பீர்கள். ஆனால் நீங்கள் முதலில் அதை விசுவாசிக்க வேண்டும். நிச்சயமாக. ஆம். 87விருந்தினர் மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை கிதியோன் கண்டான். கிதியோன் அவரை முதலில் ஒரு விதமாக கேள்வி கேட்டான். அவன், “தேவன் இன்னமும் தேவனாயிருந்து, நம்மோடு கூட இருப்பாரானால், அவருடைய அற்புதங்கள் எங்கே?'' என்று அவரைக் கேட்டான். மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருந்த இந்த விருந்தினர் என்ன செய்தார்? அவர் கையில் வைத்திருந்த கோலால் பலியைத் தொட்ட போது, அக்கினி அதை பட்சித்தது. கிதியோன் அது தேவனுடைய செயல் என்று அறிந்து கொண்டான். அவன் உடனே, வயோதிபரைப் போல் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்த விருந்தினர் வார்த்தை மாமிசமானவர் என்பதைக் கண்டு கொண்டான். அல்லேலூயா! அது ஜீவிக்கிற வார்த்தை என்பதை அவன் அறிந்தான், ஏனெனில் அது நிகழ்காலத்தில் ஜீவித்து கிரியை செய்தது. தேவனுக்கு மகிமை, சகோதரனே! 88பெந்தெகொஸ்தே அனுபவம் நல்லது தான். ஆனால் நீ அதை பெற்றுக் கொள்ளாமலிருந்தால், அது படத்தில் வரையப்பட்ட அக்கினியே. அது இறந்த காலம் அல்ல, நிகழ்காலம்! தேவன் இன்றைக்கும் அதே தேவனாயிராமல் போனால், சரித்திரப் பிரகாரமான தேவனைக் குறித்து என்ன பயன்? நான் அடிக்கடி கூறுவது போன்று, நீங்கள் பறவையை வளர்த்து, அதன் சிறகுகள் வளர வேண்டுமென்பதற்காக அதற்கு விட்டமின்கள் கொடுத்து, அதை கூண்டில் அடைத்து வைப்பதனால் என்ன பயன்? வல்லமையுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார் என்று ஜனங்களுக்கு போதித்து, அதே சமயத்தில் அவர்கள் தேவனை சேவிக்காதபடிக்கு அவர்களுக்கு அந்த சிலாக்கியத்தை மறுப்பதனால் என்ன பயன்? ஆமென். நிச்சயமாக. அர்த்தமற்றது! பெரிய முட்டை பொறிக்கும் இயந்திரத்தைப் போல் போதகரை பொறிக்கும் பள்ளிகளாக இந்த வேத சாஸ்திரப் பள்ளிகளை நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்? பாருங்கள்? இயந்திரத்தில் பொறிக்கப்பட்ட கோழிக் குஞ்சைக் காணும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது. ஏனெனில் அதற்கு தாய் கிடையாது. அது எங்கிருந்து வந்ததென்று அதற்கு தெரியாது. அதை தாயைப் போல் பேணி பாதுகாக்க யாருமே கிடையாது. அது இயந்திரத்தின் மூலம் பொறித்த ஒன்று. வேத சாஸ்திர பள்ளியிலிருந்து வெளிவந்த போதகரும் அவ்வாறே உள்ளார். அவருக்கு வேத சாஸ்திரம் மாத்திரமே தெரியும். அவர் எந்த ஒரு மேதையைப் போன்று அறிவாளியாகவும் நாகரீகமுள்ளவராகவும் இருக்கலாம், அவரால் ஒருக்கால் அநேக மொழிகளில் பிரசங்கம் செய்யக் கூடும். ஆனால் அவருடைய தகப்பன் யாரென்று அவருக்கு தெரியாமலிருந்தால்...! 89அண்மையில் நான் கூறினது போன்று, அறியாமை கொண்ட மிருகம் ஒன்று இருக்குமானால், அது கோவேறுக் கழுதையே. அதற்கு தகப்பன் யார், தாய் யாரென்று தெரியாது. அது கலப்புள்ள ஒரு மிருகம், பாருங்கள், அதன் தகப்பன் யார், தாய் யாரென்று அதற்கு தெரியாது. அது ஸ்தாபனங்களால் வளர்க்கப்பட்ட கலப்புள்ள கிறிஸ்தவர்களைப் போன்றது. ஆனால் உயர்ந்த ஜாதி குதிரை நல்ல வம்சத்தில் பிறந்தது (pedigree). அதற்கு அதெல்லாம் என்னவென்று தெரியும். அது போன்று நல்ல ஒரு கிறிஸ்தவனும் தேவனுடைய சேமிப்பு ஸ்தலம் எங்குள்ளது என்பதை அறிந்திருக்கிறான். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தையினால் பிறந்தவர்கள். வார்த்தையானது அவர்களில் மாம்சமாக்கப்பட்டுள்ளது. தேவன் கூறின எந்த ஒரு வார்த்தையுடனும் அவர்களுக்கு கருத்து வேற்றுமை கிடையாது. அவர்கள், ''அது உண்மை! ஆமென், ஆமென்!'' என்கின்றனர். அவர்கள் “ஆமென்” என்னும் சொல்லினால் அதை ஒவ்வொருமுறையும் ஆமோதிக்கின்றனர், ''ஆமென்! ஆமென்!“ அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அதற்கு ஆமோதம் தெரிவிக்கிறது. அது அவரே. ''இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' “ஆமென்!'' “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' ''ஆமென்!'' ''நீங்கள் உலகெங்கும் போய், சர்வதிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கிப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.'' “ஆமென்!” பெட்டைக் கோழி, ''க்ளக்-க்ளக்-க்ளக், அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்கின்றது. ஆனால் வாத்து, “ஹாங்க்-ஹாங்க்-ஹாங்க், நான் தண்ணீரை முகருகிறேன்'' என்கின்றது. அது உண்மை. பாருங்கள்? ஏன்? நீங்கள் தேவனை சோதித்துப் பார்க்கின்றீர்கள். பாருங்கள், அது தான், தேவன் முதலில், அவருடைய வார்த்தையின்படி நடவுங்கள், பிறகு அது சரியா என்று பாருங்கள். அது உண்மை. 90யோவான் ஸ்நானன் அவனுடைய கடமையின் பாதையை பின்பற்றினான். அவனைக் குறித்து அறிந்து கொள்ள அநேக சான்றுகள் அவனுடைய தந்தை மிகவும் அருமையான மனிதன். ஆனால் அவன் அவிசுவாசித்தான். தேவன் தீர்மானித்தார்... எலிசபெத் மூலம் அந்தக் குழந்தை வரவேண்டுமென்று தீர்மானித்திருந்தார். ஆகவே அவர் அவளிடம் கூறினார்... இல்லை. அவளுக்கு குழந்தை பிறக்குமென்று கூறினான். அவனோ அதை சந்தேகித்தான். அவர் அவனை ஊமையாக்கினார். யோவான் ஸ்நானனின் பெற்றோர் எலிசபெத், சகரியா இவர்களின் இருதயம் சஞ்சலப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் இருவரும் வயது சென்றவர்களாயிருந்தனர். இவர்கள் வயது சென்று, பிள்ளை பிறக்கும் வயதைக் கடந்தபின்பு, தேவன் ஒரு அற்புதத்தை செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இந்த பிள்ளையை உலகிற்கு கொண்டு வந்தார். அவர்களுடைய இருதயங்கள் சஞ்சலமடைந்திருந்தன, ஏனெனில் தேவனுடைய மகத்தான கிரியையை அவன் செய்வதைக் காண அவர்கள் உயிரோடிருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் அவர்கள் அவனை அதற்கென்று பிரதிஷ்டை செய்தனர். தேவனுக்கு மகிமை! நட்சத்திரங்களுக்கும் சந்திரனுக்கும் அப்பாலுள்ள ஓரிடத்திலிருந்து அவர்கள் கீழே நோக்கி அதை கண்டிருப்பார்கள். இந்த சிறுவன் செய்யப் போவதை அவர்கள் காண முடியவில்லை. அவர்கள் மரித்தனர், அவன் சிறுவனாயிருந்த போதே அவர்கள் மரித்தனர். அவன் பையனாயிருந்த போது வீட்டை விட்டு வெளியேறி வனாந்தரத்துக்குள் பிரவேசித்தான். அங்கு அவன் தேவனுடைய வல்லமையின் கீழ் வளர்ந்தான். 91தேவன் அவனிடம், ''நீ வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறாய். நான் உன்னை அனுப்புகிறேன், நீ போய் கூக்குரலிடு'' என்றார். யோவான் எவ்வளவாக ஒவ்வொரு நாளும் காத்திருந்து, பாறைகளிலிருந்து பாம்புகளை ஓட்டி, பாறைகளை காலால் உதைத்திருப்பான்! “ஓ, என்னால் காத்திருக்க முடியாது” என்று கூறியிருப்பான். ''யோவானே, நீ எதற்காக காத்திருக்கிறாய்?“ ''அவர் கட்டளையிடுவதைக் கேட்பதற்காக, அவ்வளவுதான். பாம்புகளே, வழியிலிருந்து விலகுங்கள்.“ அவை பாறைகளுக்குள் சென்றுவிடும். அதன் காரணமாகத் தான் அவன் பரிசேயர்களைக் கண்ட போது, ''ஓ, விரியன் பாம்பு சந்ததியே, பாறைகளுக்குள் செல்லுங்கள்'' என்றான். 92நானும் இன்றிரவு அதையே கூறுகிறேன். விரியன் பாம்பு சந்ததியே, தண்ணீருக்குள் செல்லுங்கள்! ஆமென். நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். இந்த ஒலிநாடா... பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் செல்லப் போகின்றது. தேவனுடைய அற்புதங்களை நீங்கள் காண வேண்டுமென்றால், தண்ணீருக்குள் செல்லுங்கள்! யோவான் இப்படியாக சென்று கொண்டிருக்கிறான். நல்ல தோற்றமுடைய ஒருவர் வருகிறார். அவன் “ஒருக்கால் இவராயிருக்கலாம்'' என்று கூறி அவரை உற்று நோக்கிவிட்டு, ''இல்லை, அது அவரல்ல. தேவன் எனக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளித்திருக்கிறார்” என்றான். “யோவானே, இன்று மேசியா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறாயா?'' ''ஆம்'' ''அவர் எங்கே?'' ''உலகில் எங்கோ இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் வரும் போது அவரை அடையாளம் கண்டு கொள்வேன்.'' ''உனக்கு எப்படி அவரை அடையாளம் தெரியும்?“ ''நான் எதை எதிர்நோக்கியிருக்க வேண்டுமென்று தேவன் என்னிடம் கூறியுள்ளார்.'' 93''உனக்காக ஜெபம் செய்யப்படும்போது நீ சுகமடைவாய் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' நான் எதை எதிர்நோக்க வேண்டுமென்று தேவன் என்னிடம் கூறியுள்ளார். ''நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வாயென்று உனக்கு எப்படித் தெரியும்?'' அவருடைய வார்த்தையை நான் பின்பற்றுகிறேன். நான் எதை எதிர்நோக்க வேண்டுமென்று அவர் என்னிடம் கூறியுள்ளார். அடுத்தபடியாக என்ன நேரிடுமென்று எனக்குத் தெரியும். ''பாருங்கள். அடுத்தபடியாக என்ன நேரிடுமென்று உனக்குத் தெரியுமா? நீ தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவாயானால், அவருடைய வாக்குத்தத்தம் அடுத்தபடியாக நிறைவேறும். அவர் பொய்யுரைக்க மாட்டார். அவர் தேவன். ''அடுத்தபடியாக என்ன?“ ''அவர் வரும்போது அவரை அடையாளம் கண்டு கொள்வேன்“ என்று யோவான் கூறினான். அவர்கள், “ஓ, இங்கு வந்து கொண்டிருப்பவரைப் பார். அவருடைய தலையில் கிரீடம் உள்ளது. அவர் தான் மேசியாவாக இருக்கவேண்டும். அவர் குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் சவாரி செய்து வருகிறார்!'' என்றனர். அவன், ''அது அவரல்ல'' என்றான். அவன் நேரடியாக அவனிடம் நடந்து சென்று ''உன் சகோதரனின் மனைவியை வைத்திருப்பதை நியாயமல்ல“ என்றான். அங்கு ஏதோ தவறுண்டு என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவன் அவனிடம் நடந்து சென்று அதைக் கூறினான். அது ஏரோது, பார்த்தீர்களா? ஓ, அது அவன் மனைவியை கோபமூட்டியது. அவள் தன் வாழ்நாள் முழுவதும் யோவானை வெறுத்தாள். 94யோவான் கவனித்துக் கொண்டே வந்தான். அவர் “ஓ, அவர் வரும் போது அவரை அடையாளம் கண்டுகொள்வேன்” என்றான். ''உனக்கு எப்படி அவரை அடையாளம் தெரியும்?'' ''நான் ஒரு அடையாளத்தைக் காண்பேன் என்றும், அது மேசியாவின் அடையாளமாயிருக்கும் என்றும் தேவன் என்னிடம் கூறினார். நான் மேசியாவை அடையாளம் கண்டு கொள்வேன், ஏனெனில் மேசியாவின் அடையாளம் அங்கிருக்கும்.'' தேவன் தமது சபையை அறிந்திருக்கிறார். அவர், ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்றார். அவர்கள் மெதோடிஸ்டுகள். பாப்டிஸ்டுகள், அல்லது பெந்தெகொஸ்தேயினராக இருப்பார்கள் என்று அவர் கூறவில்லை. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளம் தொடரும்'' என்று மாத்திரம் அவர் கூறினார். அவர் விசுவாசிகளை அறிந்திருக்கிறார். ''நீங்கள் ஒரு விசுவாசியா?“ என்று உங்களைக் கேட்டால். “ஓ, நான் மெதோடிஸ்டு'' என்கிறீர்கள். நீங்கள் விசுவாசியல்ல என்பதை அது காண்பிக்கின்றது. பாருங்கள். “நான் பெந்தெகொஸ்தேயினன்.” அப்பொழுதும் நீங்கள் விசுவாசியல்ல என்பதை அது காண்பிக்கிறது. நீங்கள் ஒரு விசுவாசியாயிருந்தால், நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள் எல்லோருக்கும் அது தெரியும், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். முத்திரை என்பதை புத்தகத்தின் இரு பக்கங்களிலும் உள்ளது, முன்னும் பின்னும், பாருங்கள், அவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். 95சரி. அவன், ''அவர் வரும்போது, அவரை நான் அறிந்து கொள்வேன், ஏனெனில் ஒரு அடையாளம் அப்பொழுது காணப்படும், நான் மேசியாவின் அடையாளத்தைக் காண்பேன்“ என்றான். ஒரு நாள் அவன் பார்த்துக் கொண்டிருந்தபோது... ஓ, சகோதரனே! ஏன்? அவன் அதை எதிர்நோக்கியிருந்தான். அதனால் தான். அவன் அதை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி). அது உங்கள் இருதயத்தில் பதிகிறது என்று நம்புகிறேன். அதை நீங்கள் எதிர்நோக்குகின்றீர்களா? ஏதாவதொன்று நடப்பதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? அப்படியானால் வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளுங்கள். 96அங்கு நின்று கொண்டிருந்த ஆசாரியர் அனைவரும் யோவானை விட ஐந்து மடங்கு கெட்டிக்காரர்கள். அவன் ஒரு நாளாவது பள்ளிக்கூடத்துக்கு சென்றான் என்பதற்கு நமக்கு சான்றுகள் இல்லை. ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த ஆசாரியர்களின் முப்பாட்டனார், அவருக்கும் முப்பாட்டனார், அவருக்கும் முப்பாட்டனார் ஆசாரியர்களாக இருந்தனர். சுருளில் எழுதியிருந்த அனைத்தும் - தீர்க்கதரிசிகள், ஆதியாகமம் போன்றவை அனைத்தும் - ஒரு எழுத்து விடாமல் அறிந்திருந்த ஆசாரியர்களே அங்கு நின்று கொண்டிருந்தனர். ஆனால் பாருங்கள், யோவானோ ஒரு அடையாளத்தை, மேசியாவை, எதிர்நோக்கியிருந்தான். அது தேவனாயிருந்தால், அதைக் குறித்து இயற்கைக்கு மேம்பட்ட ஏதாவதொன்று இருக்க வேண்டுமென்று அவன் அறிந்திருந்தான். அது உண்மை. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது! நீங்கள் கிறிஸ்தவர்களானால், உங்களை இயற்கைக்கு மேம்பட்ட ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது. அப்படி இல்லாமல் போனால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டீர்கள். நீங்கள் இன்னும் முன்பு வாழ்ந்து கொண்டிருந்த அதே வாழ்க்கையை வாழ்ந்து, முன்பு அன்பு கொண்டிருந்த உலகத்தின் காரியங்களில் இன்னும் அன்பு கொண்டிருப்பீர்கள். நீங்கள் வஞ்சிக்கப்பட்டீர்கள், அது உண்மை - நீங்கள் தேவனுடைய குமாரனாகவோ குமாரத்தியாகவோ இருக்க முடியாது. 97பின்பு நாம் காண்கிறோம், யோவான் ஒரு நாள் அங்கு நின்று கொண்டிருந்தான், அவனைக் குறித்து (ஒரு சிறு கதையை அவன் படித்துக் கொண்டிருந்ததாக) அவர்கள் கூறுகின்றனர் யோவான் நதியின் ஒரு புறத்தில் இருந்தான். அவர்கள் அவனைத் துரத்திவிட்டு மறுபுறத்திலிருந்தனர். அப்படித்தான் அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனுக்கு செய்கின்றனர். அவனை ஒவ்வொரு ஸ்தாபனத்திலும், எல்லாவற்றிலிருந்தும் துரத்திவிடுகின்றனர். யோவானுக்கு நிற்க ஒரு பிரசங்கபீடம் இல்லை, ஆனால் அவன் முழுங்கால் வரைக்கும் சேற்றில் நின்று கொண்டிருந்தான். அவன் விலையுயர்ந்த 'சூட்' எதுவும் அணிந்து கொண்டு கழுத்துப் பட்டையை திருப்பி உடுத்துக் கொண்டிருக்கவில்லை. இல்லை, ஐயா. அவன் ஆட்டுத் தோல் ஒன்றை அவன் உடலின் மீது சுற்றியிருந்தான், காண்பதற்கு ஒரு காட்டு மனிதனைப் போல் இருந்திருப்பான். 98அந்த ஆசாரியர்கள், ''இந்த பெரிய தேவாலயம். எங்கள் மகத்தான ஸ்தாபனம் விழப்போகும் ஒரு நேரம் வரப்போகிறது என்றா கூறுகிறாய்?'' என்றனர். அவன், ''அது நிச்சயம் நடக்கும்'' என்றான். ''உனக்கு எப்படித் தெரியும்?“ ''நீங்கள் வேதத்தைப் படிக்கின்றீர்கள் அல்லவா? மேசியா வருவாரென்றும், அவர் அன்றாட பலியை நீக்குவாரென்றும் தானியேல் கூறியிருக்கிறானே! தீர்க்கதரிசி கூறியிருக்கிறானே!'' அல்லேலூயா! ஓ, நான் அதிகமாக பக்தி பரவசப்படுகிறேன்! (நான் முடிக்க வேண்டும்). ''உனக்கு எப்படித் தெரியும்?“ “தீர்க்கதரிசி அவ்வாறு கூறியிருக்கிறான்.” அப்படித்தான் மிகாயா, அவன் ஆகாபை ஆசீர்வதிக்க முடியாது என்பதை அறிந்து கொண்டான். எலியா அவனை சபித்துவிட்டான். அவ்வளவு தான். அவன் வார்த்தையில் நிலைநிற்க வேண்டியதாயிருந்தது. நீங்கள் தேவனுடைய கிரியைகளைக் காண வேண்டுமென்றால், தேவனுடைய வார்த்தையை பின்பற்ற வேண்டும். அது நடைபெற முடியாது என்று அவன் அறிந்திருந்தான். 99ஆகவே அதன்பின் என்ன நடந்தது? அவன் தேவனுடைய கிரியைகளைக் காண விரும்பினான். யோவான், ''அவர் வரும்போது அவரை அறிந்து கொள்வேன்“ என்றான். ஒரு நாள் அவன் அங்கு நின்று கொண்டு, ''ஆம், அன்றாட பலி நீக்கப்படும் ஒரு நேரம் வரும். மேசியாவே அன்றாட பலியாயிருப்பார். பாழாக்கும் அருவருப்பு அப்பொழுது ஸ்தாபிக்கப்படும்'' என்றான். “ரபீ, அது உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? அது எங்கள் கோட்பாடுகளுக்கு முரணாயுள்ளதே.'' ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயில்லை. அங்கு ஒரு தீர்க்கதரிசி இருந்தான், கர்த்தருடைய வார்த்தை அந்த தீர்க்கதரிசியோடு இருந்தது. அது உண்மை. யோவான், ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி அங்கு நின்று கொண்டிருக்கிறார்'' என்றான். ஒரு சாதாரண, சிறு உருவம் படைத்த, தோள் தொங்கிய ஆள் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் லாசருவுடன் நதியை நோக்கி நடந்து வந்தார். ஒரு சாதாரண மனிதன். சாதாரண மனிதர்களைப் போல் உடை உடுத்தியிருந்தார். ஆசாரியனைப் போல் அல்ல. தலைப்பாகை எதுவுமில்லை, கிரீடம் இல்லை, ஒன்றுமேயில்லை. ஒரு ஏழை வாலிபன், தச்சன், நடந்து வந்தார் - கை முழுவதும் ஒருக்கால் தழும்புகள் இருந்திருக்கும், அவர் நடந்து வந்தார். ''இவரா அவர்...'' ''என்ன? அவரை உங்களால் அங்கு காண முடியவில்லையா? இதோ! (Behold) (அப்படியென்றால் ''அவரை மரியாதையுடன் நோக்குங்கள்“)! என்று அர்த்தம். ”இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி''. 100அவர்களில் சிலர், ''அது யார் தெரியுமா? அது தச்சனின் மகன், எனவே அந்த ஆள் யோவான் தீர்க்கதரிசி அல்ல என்று இப்பொழுது அறிந்து கொண்டோம்“ என்றனர். அவன் தீர்க்கதரிசியே. அவன் அதை அறிந்திருந்தான். ''இவன் என்ன கூறுகிறான் என்று இவனுக்குத் தெரியவில்லை'' அவனுக்குத் தெரிந்திருந்தது. ''அவரை மற்ற மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி அவனால் எப்படி அவர் மேசியாவென்று அறிந்து கொள்ள முடிந்தது? அவர் தான் மேசியாவென்று நாங்கள் எப்படி அறிந்து கொள்வது?'' அவர்கள் காணாத ஒன்றை யோவான் கண்டான். நீங்கள் எதை எதிர்நோக்குகின்றீர்கள் என்பதை அது பொறுத்தது, இன்றிரவு நீங்கள் எதை எதிர்நோக்குகின்றீர்கள்? ஒரு பெரிய, பிரபலமான மனிதனை, ஒரு பெரிய ஸ்தாபனத்தை, எல்லாமே உங்கள் மடியில் வந்துவிழும் என்று எதிர்நோக்கியிருக்கின்றீர்களா? அல்லது, நிந்தைப்படும் கர்த்தருடைய ஒரு சிலருடன் சேர்ந்து அவர்களுடைய வழியைப் பின்பற்றப் போகின்றீர்களா? நீங்கள் வேதாகமத்தை காண்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் காண்கிறீர்களா? நீங்கள் மறுபடியும் பிறந்தால், அதை காண்பீர்கள். அதுவரைக்கும் உங்களால் அதை காண முடியாது. 101இதோ அவர் வந்திருக்கிறார். அவன், “வனாந்திரத்திலே என்னிடத்தில் கூறினவர்...” என்றான். ''ஓ, சகோதரனே என்னை சத்தமிடும்படிக்கு கூறின அவர்... சரியாக அயினோன் தொடங்கி இன்னும் இங்கே ஒவ்வொரு இடத்திலும், மற்றும் நான் ஆறு மாத காலமாக, மாலை வேளையில் இங்கு எல்லாவிடங்களிலும், இந்த யோர்தான் முழுவதிலும், சேற்றுக்குள் நடந்து சென்று, உங்கள் போதகர்களுடன் விவாதித்து, உங்கள் ஸ்தாபனங்களை கடிந்து கொண்டு, உங்களை கஷ்டப்படுத்தி வந்தேன். நான் யாரைக் குறித்து கூறினேனோ, அவர் இங்கிருக்கிறார். அதை நான் காண்கிறேன்'' என்றான். ''உனக்கு எப்படித் தெரியும்?'' ''அவர் தான் என்னிடம் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கும்படி கூறினார். தேவன் என்னை அந்த நோக்கத்துக்காகவே எழுப்பினார். அவர் யார் மேல் ஆவியானவர் இறங்குகிறதைக் காண்கிறாயோ என்றார்''. யோவான் அவரை அறிந்திருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் முதலில் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, வார்த்தையை பிரசங்கித்தான். அவன் தேவனுடைய அடையாளத்தைக் கண்டான். இதை ஞாபகம் கொள்ளுங்கள், யோவானைத் தவிர அங்கு நின்று கொண்டிருந்த வேறு யாரும் அதைக் கண்டதாக எழுதப்படவில்லை. யோவான் மாத்திரமே அதை கண்டான். நீங்கள் எதை எதிர்நோக்குகின்றீர்கள் என்பதை அது பொறுத்தது. ஏன்? யோவான் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வந்தான். ஆசாரியர்களும் மற்றவர்களும் வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. யோவான் வார்த்தைக்கு, அவனுக்கு அளிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிந்தான். அவன் அதைக் கண்டான் (நாம் வேகமாக படிப்போம் - நாம் முடிக்க வேண்டும்). 102கல்லறையினருகில் மார்த்தாள். அவள் தேவனுடைய வார்த்தையை சந்தித்திருந்தாள். அவள் அதை விசுவாசித்தாள். அவள் தேவனுடைய அற்புதத்தைக் காணும் முன்பு, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதன்படி நடக்க வேண்டியதாயிருந்தது. அவள், “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என்றாள். அவர், ''மார்த்தாளே, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?'' என்றார். அவள், “ஆம், ஆண்டவரே,'' என்றாள். பார்த்தீர்களா, செயல்படுதல் ”நான் விசுவாசிக்கிறேன்.'' ''மார்த்தாளே, நீ என்னவென்று விசுவாசிக்கிறாய்?'' ''நீர் உலகத்தில் வருகிறவரான கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்.'' அவர், ''அவனை எங்கே வைத்தீர்கள்?'' என்றார். அவர் கல்லறையினிடத்தில் வந்தார். அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். (''நான் தான் வார்த்தை என்று அவள் உண்மையாக விசுவாசிக்கிறாளா என்று காண விரும்புகிறேன்'' என்றார்.) அவர் ''கல்லை எடுத்துப் போடுங்கள்“ என்றார். அவள் வார்த்தையின்படி நடந்தாள்! மரணம் ஜீவனாக மாறுவதை அவள் காண வேண்டுமென்றால், அவள் அப்படித்தான் நடக்க வேண்டும். நீங்களும் மரணம் ஜீவனாக மாறுவதைக் காணக் கூடிய ஒரே வழி; அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பதன் மூலமே. நீ பாவியாயிருந்தால் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதன்படி நட. அப்பொழுது நீ தேவனுடைய அற்புதத்தை காண்பாய். நீ தேவனுடைய அற்புதமாகி விடுவாய். நீ வியாதிப்பட்டிருந்தால், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள். மருத்துவர் ஒருக்கால் “நீ மரித்துப் போவாய்” என்று கூறலாம். நீ தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதன்படி நட. அது புது ஜீவனைக் கொண்டு வரும். 103ஓ, என்னே! உங்களை இவ்வளவு நேரம் வைத்திருப்பதற்காக வருந்துகிறேன். இன்னும் இரண்டு காரியங்கள், அதன்பிறகு முடித்து விடுகிறேன். பாருங்கள், இரண்டு காரியங்கள் மாத்திரமே. நான் உண்மையாக முடித்து விடுவேன். என் சகோதரர்கள் பேச வேண்டிய நேரத்தை நான் எடுத்துக்கொண்டதற்காக வருந்துகிறேன். பாருங்கள், அவர்களுக்கு இரண்டு மணி நேரமே அதற்காக விடப்பட்டிருக்கும். கவனியுங்கள். கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ. அவள் ஒரு பாவி. அவளுக்கு ஐந்து புருஷர் இருந்தனர். அவள் ஒரு நாள் தண்ணீர் மொள்ள அங்கு வந்தாள். அவள் தண்ணீரை கிணற்றிலிருந்து இழுத்துக் கொண்டிருந்த போது, ஒரு மனிதன் ''ஸ்திரீயே, தாகத்துக்குத் தா'' என்று கூறும் சத்தத்தைக் கேட்டாள். அவள் திரும்பி அவரை பார்த்தாள். அவள், “யூதர்கள் சமாரியர்களுடன் சம்பந்தங்கலவாதவர்கள். நான் ஒரு சமாரிய ஸ்திரீ. அப்படியிருக்க நீர் எப்படி என்னுடன் பேசலாம்?'' என்று கேட்டாள். அவர், ''உன்னிடத்தில் பேசுவது யாரென்று நீ அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய்.'' என்றார். அவள், ''அது எப்படி? மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு தண்ணீர் கிடைக்கும்?'' என்றாள்.. அவர், ''நான் கொடுக்கும் தண்ணீர் ஆத்துமாவில் ஊறுகிற பீறிட்டு வரும் நீரூற்றாயிருக்கும்“ என்றார். 104அவள், “ஒரு நிமிடம் பொறுங்கள். நீர் ஒரு யூதன். நீங்கள் எருசலேமில் தொழுது கொள்கிறீர்கள், எங்கள் பிதாக்கள் இந்த மலையில் தொழுது கொண்டு வந்தார்கள்'' என்றாள். அவர், ''நான் சொல்லுகிறதை நம்பு! நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளுங்காலம் வருகிறது, தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்'' என்றார். அந்த ஸ்திரீ, “ஒரு நிமிடம் பொறு, இந்த ஆள் யார்?'' என்று சிந்தித்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. அவர் யாரென்று அவள் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார், ஏனெனில் அவள் அவரை சமாரியருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதாயிருந்தது. அவர் யார்!'' என்று அவள் கேட்டாள். அவர் அவளிடம் சில நிமிடங்கள் பேசினார். அவர், “ஸ்திரீயே, உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். “அவர் புத்திசாலி போல் நடக்கிறார்” என்றாள், பாருங்கள், அவள், “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள்“. ஓ - ஓ! அப்பொழுது கோல் பலியைத் தொட்டது. பாருங்கள், ஏதோ ஒன்று சம்பவித்தது. என்ன நடந்தது? அவள் தேவனுடைய அற்புதத்தைக் கண்டாள். அவர், “நீ சொன்னது சரிதான், எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்” என்றார். 105அவள் திரும்பினாள். தேவன் மரித்துவிட்டதாக ஜனங்கள் பல ஆண்டுகளாக கருதியிருந்ததாக அவள் அறிந்திருந்தாள். அவர்களுடைய ஆசாரியர்களும் ரபீகளும் தேவனைக் குறித்து பேசி வந்தனர். ஆனால் அவர் ஒருவர் வரப்போகிறார் என்று வேதம் வாக்களித்திருந்தது. அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன் என்றாள். பாருங்கள்? மேசியா வருகிறார் என்று அறிவோம். (இதைக் குறித்து நான் உறுதியாக கூறட்டும்) மேசியா வருகிறார் என்று அறிவோம் (இதை நான் அவரிடம் கேட்பேன். அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம், தேவனை அறியாத ஒரு மனிதனால் இதை உரைத்திருக்க முடியாது) கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவோம். அவர் வரும்போது இதை தான் அவர் செய்வார். அவருக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.“ அவர், ''நானே அவர்“ என்றார். அது போதும். அது போதும். அவள் ஊருக்குள்ளே ஓடி, ''நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்கு சொன்னார். அவரை வந்து பாருங்கள் என்றாள்.“ அவள் அந்த செய்தியைக் கொண்டு செல்வதற்கு முன்பு, அவள் முதலில் தேவனுடைய அற்புதத்தை காண வேண்டியதாயிருந்தது. அவள் தேவனுடைய அற்புதத்தை காண்பதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அது முற்றிலும் உண்மை. ஓ, என்னே, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! வேறொன்றைப் பார்ப்போம். 106பெந்தெகொஸ்தே. அவர்கள் வார்த்தையுடன் கூட நடந்த பிறகு, அவர்கள் வார்த்தையைக் கண்டபிறகு, அவர்கள் வார்த்தையை விசுவாசித்த பிறகு; ஆனால் அவர்கள் பெந்தெகொஸ்தே அற்புதத்தைக் காணும் முன்பு, அவர்கள் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? ''நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்'' என்று வார்த்தை உரைத்தது. எட்டு நாட்கள் கழித்து மத்தேயு மாற்குவை நோக்கி, “என்ன தெரியுமா? அன்றொரு நாள் எனக்கு சிறிது வினோத உணர்ச்சி ஏற்பட்டது. அது பரிசுத்த ஆவியாகத் தான் இருக்கவேண்டும். அவர் நம்மை இங்கு காத்திருக்கும்படி கூறினார். பார், அது அதுவாகத்தான் இருக்கவேண்டும்'' என்றான். “ஓ, நாம் இன்னும் ஒரு நாள் காத்திருப்போம்.'' 107ஒன்பதாம் நாள் வருகிறது. ''நல்லது, ஒன்பது நாட்களுக்கு முன்பு அவர் நம்மை எருசலேம் நகரத்துக்கு செல்லும்படி கூறினார். அதை நாம் பெற்றுக் கொண்டோம் என்று நீ விசுவாசிப்பதில்லையா? அவரை நாம் விசுவாசித்த போதே அதை நாம் பெற்றுக் கொண்டோம் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?'', ஓ, அருமை பாப்டிஸ்டுகளே பாருங்கள்? அவன், ''அதை நாம் பெற்றுக் கொண்டோம் என்று நினைக்கிறேன், ஏனெனில் இங்கு வந்து காத்திருக்கும்படி அவர் நம்மிடம் கூறினார். நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? நாம் இங்கு அடைந்தவுடன், அவர் கூறினதற்கு நாம் கீழ்ப்படிந்ததால் அதை பெற்றுக் கொண்டு விட்டோம் என்று நினைக்கிறேன்'' என்றான். ஆனால் அவர் என்ன கூறினார்? அவர், ''நீங்கள் அங்கு அடைந்தவுடன் அதை பெற்றுக் கொள்வீர்கள்'' என்றோ, ''ஐந்து நாட்கள் காத்திருங்கள், ஒன்பது நாட்கள் காத்திருங்கள் என்றோ கூறவில்லை. அவர் தரிப்பிக்கப்படும் வரைக்கும்...“ என்று கூறினார். அது தான். ”கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைவார்கள் பாருங்கள்.“ 108நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து, அதில் நிலை நிற்கவேண்டும். ஒவ்வொரு நாளும் வார்த்தையைக் கொண்டு சாத்தானை எதிர்த்து, ''எழுதியிருக்கிறதே! எழுதியிருக்கிறதே! எழுதியிருக்கிறதே! எழுதியிருக்கிறதே! எழுதியிருக்கிறதே! எழுதியிருக்கிறதே! எழுதியிருக்கிறதே!'' என்று போராட வேண்டும். அப்பொழுது அது நிறைவேறியே ஆக வேண்டும். நீங்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் செயல்படுகிறீர்கள், பாருங்கள், அப்பொழுது நீங்கள் தேவனுடைய அற்புதத்தைக் காண்பீர்கள். அது உண்மை. ஆனால் முதலில் நீங்கள் அதன் பேரில் செயல்பட வேண்டும். அவர்கள் மேலறைக்குச் சென்று, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அங்கு காத்திருந்தனர். ஒன்பதாம் நாள் வந்தது. பேதுரு, “என்ன தெரியுமா, சகோதரர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்பதை என்னால் கேட்க முடிகிறது. மாற்கு எழுந்து நின்று, “என்ன தெரியுமா? சகோதரரே, நாம் விசுவாசத்தினால் அதை ஏற்றுக்கொள்வோம், ஏனெனில் நாம் கீழ்ப்படிந்திருக்கிறோம்'' என்று சொல்லியிருப்பான். இல்லை, நீங்கள் முற்றிலும் கீழ்ப்படியவில்லை. 109நீங்கள், ''நான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன்'' எனலாம். அது முற்றிலும், கீழப்படிவதல்ல, பாருங்கள்? நீங்கள், ''நான் ஒரு சபையைச் சேர்ந்திருக்கிறேன்'' எனலாம். அது கீழ்ப்படிவதல்ல, பாருங்கள். நான் அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை உச்சரிக்கிறேன்.'' அதுவும் கீழ்ப்படிதல் அல்ல, “ஓ, சகோதரனே, நான் பொய் சொல்லுவதையும் களவு செய்வதையும் விட்டுவிட்டேன். நான் நீசத்தனமான ஒன்றையும் செய்வது கிடையாது.” அதுவும் கீழ்ப்படிதல் அல்ல. அது பிறப்பாய் இருக்க வேண்டும்! ஏதாவதொன்று நிகழ வேண்டும். நீங்கள் மரித்து, ஏதாவதொன்று உங்களில் பிறக்க வேண்டும். ஓ, அவர்கள் பல நாட்கள் காத்திருந்தனர், ஒன்பது நாட்கள் கழிந்தன. அவர்கள், ''அதை நாம் ஏற்றுக் கொண்டு நம்முடைய ஊழியத்தை தொடர்ந்து செய்வோம். உலகம் அங்கு மரித்துக் கொண்டிருக்கிறது, நான் ஏன் இன்னும் காத்திருக்க வேண்டும்?'' என்றனர். 110அப்பொழுது பேதுரு, ''உங்களுக்குத் தெரியுமா, அது சரியல்லவென்று ஏதோ ஒன்று என்னிடம் கூறுகின்றது. அது வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிவதல்ல. பாருங்கள், தேவன் நமக்கு வாக்களித்த அற்புதத்தை - அதாவது, பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை நம் மேல் அனுப்பும் அந்த அற்புதத்தை - நாம் காண வேண்டுமென்றால், ஏதாவதொன்று நிகழும் வரைக்கும் இங்கு நாம் காத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அது இவ்விதமாகவே வரும் என்று வேதம் உரைத்துள்ளது. மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைக் காட்டுவேன் என்று யோவேல் உரைத்திருக்கிறான். 'ஏசாயாவும், பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல். இதுவே ஆறுதல் என்று அவர்களோடே சொன்னாலும் கேட்க மாட்டோம் என்கிறார்கள்' என்று கூறியிருக்கிறான்.' இப்பொழுது, சகோதரரே, நாம் எந்த அனுபவத்தையும் பெறுவதைக் காணாமல் இங்கிருந்து வெளி நடந்துவிடக் கூடாது, பாருங்கள். நாம் ஏதாவதொன்றைப் பெறவேண்டும். ஏனெனில் அவர், 'பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் இங்கு காத்திருங்கள்' என்று கூறினார். நான் இங்கு வந்தபோது எனக்கிருந்ததைக் காட்டிலும் அதிகமான பெலன் இப்பொழுது எனக்கில்லை. நான் இரவு முழுவதும் இருந்திருக்கிறேன், அடுத்த நாள் இரவும் இங்கு இருந்திருக்கிறேன், இப்படியாக ஒன்பது இரவுகளாக இங்கு இருந்திருக்கிறேன். நான் உள்ளே வந்த போது எப்படியிருந்தேனோ அப்படியே தான் இப்பொழுதும் இருக்கிறேன். நாம் பெலனைப் பெற்றுக் கொள்வோம் என்று அவர் கூறினார். எனவே நாம் காத்துக்கொண்டே இருப்போம். என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.“ 111அப்பொழுது திடீரென்று, அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த பிறகு, பெந்தெகொஸ்தே அற்புதத்தைக் கண்டனர். அக்கினி கட்டிடத்தில் விழுவதை அவர்கள் கண்டனர். அக்கினி ஸ்தம்பம் ஜனங்களின் மத்தியில் இறங்கி வந்தது. அக்கினி மயமான நாவுகள் போன்ற பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். அது எப்பொழுது நிகழ்ந்தது? அவர்கள் ஏற்கனவே அதை பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்த போதா? இல்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த போது, பெந்தெகொஸ்தே அற்புதத்தைக் கண்டனர். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது, நீங்களும் அதையே செய்ய வேண்டும். 112இப்பொழுது, நண்பர்களே, இத்துடன் நான் உண்மையாக முடித்துக் கொள்கிறேன். வேறொரு பக்கத்துக்கு நான் திருப்பப் போவதில்லை. சரி, இதை நான் கூறும் இந்நேரத்தில் அடுத்ததாக பேசப் போகிறவர் ஆயத்தமாகுங்கள். மோசமான எல்லா விதமான பெயர்களாலும் நாம் அழைக்கப்பட்டு விட்டோம்... ''உருளும் பரிசுத்தர், பெந்தெகொஸ்தேகாரன், சபையை - உடைப்பவன், மாய்மாலக்காரன், பெயல்செபூல், சொப்பனக்காரன்“ போன்ற பெயர்களால் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படக் கூடுமோ, அத்தனை பெயர்களாலும் நாம் அழைக்கப்பட்டுவிட்டோம். அவர்கள் என்ன செய்கின்றனர், உங்களை எப்படி அழைக்கின்றனர்? ”சொப்பனக்காரன், பெயல்செபூல், கள்ளத் தீர்க்கதரிசி, இயேசு மாத்திரம்.'' என்னென்ன பெயர்களால் அவர்கள் அழைக்க முடியுமோ, அத்தனை பெயர்களாலும். ஆனால் உண்மையான தேவனுடைய வார்த்தையையும், வார்த்தைக்கு உண்மையான அவருடைய தீர்க்கதரிசியையும் விசுவாசிப்பதன் மூலம் நமக்கு என்ன நேரிடுகிறது? நாம் இப்பொழுது காண்பவைகளைக் காண்கிறோம். 113ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள், அவர்கள் தூர தேசத்திலிருந்து வருவார்கள், நமது ராஜாவுடன் விருந்துண்ண, அவருடைய விருந்தாளியாய் உண்ண; தெய்வீக அன்பினால் ஜொலிக்கும்! அவருடைய பரிசுத்தமான முகத்தைக் காண, இந்த யாத்திரிகர்கள் எவ்வளவாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அவருடைய கிருபையின் ஆசீர்வாதத்தில் பங்கு கொண்டு, அவருடைய கிரீடத்தில் இரத்தினக் கற்களாய் பிரகாசிக்கின்றனர். இயேசு சீக்கிரமாய் வருகிறார், அப்பொழுது நமது சோதனைகள் தீரும். ஓ, நமது கர்த்தர் இந்த நேரத்தில் வருவாரானால், பாவத்திலிருந்து விடுதலையானவர்களுக்கு அது எப்படியிருக்கும்? ஓ, அது உங்களுக்கு மகிழ்ச்சியூட்டுமோ, அல்லது துயரத்தையும் ஆழ்ந்த நம்பிக்கையின்மையும் அளிக்குமா? நமது கர்த்தர் மகிமையில் வரும்போது, நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம். 114ஏன்? அவருடைய வார்த்தையின் பேரில் நாம் செயல்படுகிறோம்! ஆமென். நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். எங்கள் மத்தியில் நாங்கள் மேசியாவின் அடையாளத்தைக் காண்கிறோம். நாங்கள் அக்கினி ஸ்தம்பத்தைக் காண்கிறோம்! அதை மறுக்க முடியாது. அவர்கள் எந்த பெயரினாலும் நம்மை அழைக்கட்டும். தேவன் இருக்கிறார். விஞ்ஞானம் அதை புகைப்படம் எடுத்துள்ளது. ஏன்? அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதனால் சரித்திரத்தில் இதுவரையிலும் அப்படி நடக்கவில்லை. புகைப்படக் கருவியின் இயந்திரக்கண் அது அவ்வாரென்று அறிவித்துவிட்டது. ஒளி அதன் லென்ஸின் மேல்பட்டது. ஏன்? தேவனுடைய வார்த்தையை முதலில் ஏற்றுக் கொண்டதனால் ஸ்தாபனங்கள் வேண்டுமானால் உங்களை வெளியே உதைத்து தள்ளட்டும். வேண்டுமானால் அவர்கள் எல்லோருமே தங்கள் முதுகுகளை உங்களுக்கு காண்பிக்கட்டும். நீங்கள் தேவனுடைய அற்புதங்களைக் காண விரும்பினால், தேவனுடைய வார்த்தையின்படி செயல்படுங்கள். 115''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும்'' என்று இயேசு வாக்களித்துள்ளார். தூதன் இறங்கி வந்தார். அது தேவன் மனித சரீரத்தில் வெளிப்படுதல், அவர் தமது முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பிக்கொண்டு - ஆபிரகாம் யாரென்று அறியாதவர் போல பாசாங்கு செய்து, அவனை “ஆபிரகாமே'' என்று ஆழைத்தார். ஆபிராம் அல்ல சில நாட்களுக்கு முன்பு அவர் அவனுடைய பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ''உன் மனைவி சாராள் எங்கே?'' சா-ரா-ய் என்றல்ல, சா-ரா-ள். ''உன் மனைவி சாராள் எங்கே?'' அவனைத் தகப்பன் என்னும் பெயராலும் அவளை ராஜகுமாரத்தி என்னும் பெயராலும் அழைத்தார். ஓ! அவர் யார்? அது யாரென்று ஆபிரகாம் உடனே கண்டு கொண்டான். அவன், ''உமக்குப் பின்னால் கூடாரத்தில் இருக்கிறாள்“ என்றான். அவர், ''ஆபிரகாமே, உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். நான் (நான்) உனக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி, நான் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக நீ காத்திருந்தாய். இருபத்தைந்து ஆண்டுகளாக நீ காத்திருந்தாய். நீ வார்த்தையில் நிலை நின்று, வார்த்தையின்படி செயல்பட்டாய். இந்த உலகத்தை நீ சேர்ந்தவன் என்பதையும் கூட மறுத்தாய். நீ அந்நியனும் பரதேசியுமாகி, தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்துக்கு காத்திருந்தாய். பெறப்போகும் இந்த பிள்ளையின் மூலம் நீ அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று உனக்கு நான் வாக்களித்தேன். நீ வார்த்தையின் பேரில் செயல்பட்டாய், இப்பொழுது தேவனுடைய அற்புதத்தை காணப்போகிறாய்'' என்றார். ''என் ஆண்டவரே, அதை நான் எப்படி காண்பேன்?'' ''உன் மனைவி சாராள் எங்கே?“ “உமக்குப் பின்னால் கூடாரத்தில் இருக்கிறாள்.” ''உற்பவ காலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்“ என்றார். அப்பொழுது சாராள் தன் உள்ளத்தில் நகைத்து, ''நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?“ என்றாள். அவர், ''சாராள் ஏன் நகைத்தாள்?“ என்றார். அவன் தேவனுடைய வார்த்தையின்படி செயல்பட்டான், ஆகையால் அவன் தேவனுடைய அற்புதத்தைக் கண்டான். இயேசு, ''சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்“ என்றார். பாருங்கள், தேவனுடைய வார்த்தையின்படி நடவுங்கள், அப்பொழுது தேவனுடைய அற்புதத்தைக் காண்பீர்கள். 116அது என்ன? அண்மையில் நான் நின்று கொண்டு சபை காலங்களைக் குறித்து பிரசங்கம் செய்து அவைகளை விளக்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மேலேயுள்ள அந்த சிறு அடையாளம் கரும்பலகையில் வரைந்தது. கூட்டத்தில் இப்பொழுது இங்குள்ளதைக் காட்டிலும் அதிகம் பேர் இருந்தனர். நான் பேசிக் கொண்டிருந்த போது, ஜொலிக்கும் ஒளி கீழே இறங்கி வந்து அந்த சுவற்றின் மேல் தொங்கினது. எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு நிழல் அதன் மேல் வந்து, சபை, காலங்களை அது இருந்த விதமாகவே அளந்தது. அன்று இருந்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர், உங்கள் கைகளை உயர்த்துங்கள். பாருங்கள்? உங்கள் சொந்த கண்களினால் அதை கண்டீர்கள். அது என்ன? முதலாவதாக, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதை பிரசங்கித்து, அதை ஏற்றுக் கொண்ட போது, நாம் தேவனுடைய அற்புதத்தை கண்ணாரக் கண்டோம், அது வார்த்தையை உறுதிப்படுத்தினது, அது உண்மை. ஓ, இயேசு சீக்கிரமாய் வருகிறார், (எல்லோரும் சேர்ந்து) அப்பொழுது நமது சோதனைகள் தீரும். நமது கர்த்தர் இந்நேரத்தில் வருவாரானால், பாவத்திலிருந்து விடுதலையானவர்களுக்கு அது எப்படியிருக்கும்? அது உங்களுக்கு மகிழ்ச்சியூட்டுமா, அல்லது துயரத்தையும் ஆழ்ந்த நம்பிக்கையின்மையும் அளிக்குமா? நம் கர்த்தர் மகிமையில் வரும்போது, நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம். 117(ஆமென்). ஏன்? நாம் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, தீவட்டியில் எண்ணெயை ஊற்றி அதை சுத்தம் செய்து, அதை எரிய வைத்துக் கொண்டிருக்கிறோம். மனுஷர் உங்கள் நற்கிரியைகளை, உங்கள் கனிகளை கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படியாக உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பு பிரகாசிக்கக்கடவது. என்ன நடக்கும்? நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதன்படி நடப்போமானால், அவரை நாம் ஆகாயத்தில் சந்திப்போம். அதில் சிறிதும் சந்தேகமில்லை! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் முடிக்கப் போகிறேன். மூன்றில் ஒரு பாகம் மாத்திரமே பேசினேன். கர்த்தருக்கு சித்தமானால், மற்றொரு சமயம் அதை முடிப்பேன். ''தேவன் எங்களோடே இருந்தால் அவருடைய அற்புதங்கள் எங்கே? பாருங்கள்,“ நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 118ஓ, தேவனே, வரப்போகும் ஆண்டை நாங்கள் காணட்டும். வரப்போகும் ஆண்டில் சபை ஸ்தாபனம், கோட்பாடுகள், கை குலுக்குதல் அல்லது மார்க்கம் என்று அழைக்கப்படுதல் ஆகியவைகளுடன் எங்கள் இருதயங்கள் திருப்தி கொள்ளாமல், அற்புதங்களைச் செய்யும் தேவனுடைய வல்லமை எங்கள் இருதயத்திலிருந்து உலக ஆசையை எடுத்துப் போட்டு, கிறிஸ்துவை உருவாக்குவதில் மாத்திரம் திருப்தி கொள்ள அருள் புரியும். இன்றிரவு தொடங்கி, நாளை மாத்திரம் ஏதோ ஒன்றைச் செய்வது என்பதல்ல; ஆனால் அவரில் பூரண புருஷராக வளர கிருபை தாரும். அவரை சந்திக்கும் வரைக்கும், நாம் அவரில் வளருவோமாக. நாம் தலை வணங்குவோம். இடம், இடம், ஆம், இடமுள்ளது, ஊற்றண்டை உனக்காக இடமுள்ளது; இடம், இடம், ஆம், இடமுள்ளது, ஊற்றண்டை எனக்காக இடமுள்ளது. 119எங்கள் பரலோகப் பிதாவே, தாழ்மையுள்ள ஆத்துமாவோடும் ஆவியோடும், என் தொண்டை கரகரப்பாயுள்ள இந்நேரத்தில், என்னிலிருந்து புறப்படும் விட்டுவிட்டு வரும் வார்த்தைகளை, தேவரீர், நீர் கோர்வையாக இணைத்து அளிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அதை எப்படி செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் மனதில் தோன்றுவதை நான் கூறுகிறேன். இங்குள்ள ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் நீர் அதைப் பதித்து, எந்த மனப்பான்மையுடன் அது அளிக்கப்பட்டதோ, அதை அவர்கள் விசுவாசிக்க அருள் புரியும். பிதாவே, அது அவர்களுக்கு நியாயமானதாய் காணப்பட்டு, கிறிஸ்துவை அவர்களிடம் கொண்டு வரட்டும். பிதாவே, இன்றிரவு எங்களை ஆசீர்வதியும். நாங்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் செயல்பட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இந்த சகோதரர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய நேரத்தை சிறிது எடுத்துக் கொண்டதற்காக, பிதாவே, என்னை மன்னியும். அவர்களை பரிசுத்த ஆவியினால் வல்லமையாக அபிஷேகித்து, தேவனுடைய வல்லமை இக்கட்டிடத்தில் விழுந்து, பாவிகள் பீடத்தண்டை வந்து மனந்திரும்பி அழுது கல்வாரியை அடைவார்களாக; வியாதியஸ்தர்கள் சுகமடைந்து, மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நிகழவும், அற்புதங்களைச் செய்யும் ஜீவனுள்ள தேவனின் வல்லமையை நாங்கள் காணவும் அருள்புரியும். பிதாவே, அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம், இயேசுவின் நாமத்தில். ஆமென். 120கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? தேவன் நம்மோடிருந்தால் அவருடைய அடையாளத்தை நாம் காணட்டும். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற மேசியாவின் அடையாளம் எங்கே? மேசியா மாறாதவராயிருப்பாரானால், அவர் அதே அடையாளத்தைக் கொண்டிருப்பார். அவர் எங்கே? அவர் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்? நாம் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டால், மேசியாவையும் அவருடைய அடையாளத்தையும் காணமுடியும்? அதைக் காண நாம் எந்த வீட்டில் பிரவேசிக்க வேண்டும்? அதைக் குறித்து சிந்தித்து பாருங்கள். வருந்துகிறேன், சகோ. நெவில்.